மரத்தில் சேலை கட்டி சிறைக்குள் இறங்கிய மர்ம நபர்கள்.. கைதிகளுக்கு செல்போன் சப்ளை..
புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள மத்திய சிறை வளாகத்திற்குள் மர்ம நபர்கள் சேலை கட்டி இறங்கி, கைதிகளுக்காக செல்போன்களை வீசிவிட்டுச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி காலாப்பட்டில் உள்ள மத்திய சிறையில் 300 க்கும் மேற்பட்ட தண்டனை கைதிகள் மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் கொரோனா தொற்று அபாயம் காரணமாக சிறையில் இருந்த 4 பெண் கைதிகள் உள்பட்ட 68 சிறு குற்றங்களில் ஈடுபட்ட கைதிகள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இருப்பினும், 200 க்கும் மேற்பட்ட தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் காரணமாக சிறைக் கைதிகளை உறவினர்கள் சந்திக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் செல்போன்கள் மற்றும் போதைப்பொருட்கள் பயன்படுத்துவது தொடர்கதையாக இருந்து வருகிறது. மேலும் பிரபல ரவுடிகள் சிறையில் இருந்தவாறே செல்போன் மூலம் தொழிலதிபர்களை மிரட்டி, வெளியில் உள்ள தங்கள் ஆதரவாளர்கள் மூலம் பணம் பறிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் காலாப்பட்டு மத்திய சிறை வளாகத்திற்குள் மர்ம நபர்கள் சேலை கட்டி இறங்கி, கைதிகளுக்காக செல்போன்களை வீசிவிட்டு சென்ற சம்பவம் சிறைக்காவளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறை வளாகத்தில் ரோந்து சென்ற வார்டன்கள், இரண்டாவது மதில் ஓரம் சிறிய துளை இருப்பதை பார்த்து, அதனை அடைக்க முயன்றனர். அப்போது துளையில் கிடந்த சிறிய டப்பாவை பிரித்து பார்த்தபோது அதில் 5 செல்போன்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து சிறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. உடனடியாக துளையை மூடி, அங்கிருந்த மரக்கிளையை வெட்டி அகற்றினர்.
இதையடுத்து தண்டனை கைதிகள் அரையில் சோதனை நடத்தியதில், விசாரணை கைதியான பாம் ரவியிடம் இருந்து ஒரு செல்போனை சிறைக்காவலர்கள் கைப்பற்றினர். சிறைச்சாலையை சுற்றிலும் 8 அடி உயரம், 10 அடி உயரம் என அடுத்தடுத்து இரண்டு மதில் சுவர்கள் உள்ளன. இரண்டாவது மதில் சுவர் அருகே தான் செல்போன்கள் சிக்கியுள்ளன.
12 மணி நேரம் வேலை நீட்டிப்பு.. புதுச்சேரி முழுவதும் தொழிலாளர்கள் கடும் கொந்தளிப்பு
மர்ம நபர்கள் முதல் மதில் சுவரையொட்டி உள்ள மரத்தின் கிளையில் சேலை கட்டி, அதன் வழியாக சிறை வளாகத்திற்குள் இறங்கி, இரண்டாவது மதில்சுவர் வரை சென்று, செல்போன்களை வைத்து சென்றது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக சிறை நிர்வாகம் அளித்த புகாரின் அடிப்படையில் காலாப்பட்டு காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறையில் செல்போன்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் சிறைத்துறையினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.