திருநள்ளாறு கோவிலுக்கு வருபவர்களுக்கு... கொரோனா சான்றிதழ் தேவையில்லை... உயர்நீதிமன்றம் உத்தரவு!
காரைக்கால் : திருநள்ளாறு சனிபெயர்ச்சியை ஒட்டி, சனீஸ்வர பகவான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கொரோனா பரிசோதனை சான்றிதழை வைத்திருக்க வேண்டிய கட்டாயமில்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பக்தர்களுக்கு வெப்ப நிலை பரிசோதனை செய்து, வெப்ப நிலை அதிகமாக இருக்கும் நபர்களுக்கு மட்டுமே கொரோனரா பரிசோதனை செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
புதுச்சேரி துணைநிலைஆளுநர் கிரண் பேடி பங்கேற்ற ஆலோசனை கூட்டத்தில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கொரோனா பரிசோதனை சான்றிதழை வைத்திருக்க வேண்டும் என கூறிய நிலையில் உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
கொரோனா நிதியுதவி மசோதா... கையெழுத்திட டிரம்ப் மறுப்பு... 14 மில்லியன் பேர் பாதிப்பு!
வழக்கு
கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் உள்ளதால், சனி பெயர்ச்சியை ஒட்டி டிசம்பர் 27ம் தேதி முதல் பிப்ரவரி 12ம் தேதி வரை திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலுக்குள் பக்தர்களை அனுமதிக்கும் முடிவை கைவிடக்கோரி கோவிலின் பரம்பரை ஸ்தானிகர்கள் சங்க தலைவரான எஸ்.பி.எஸ். நாதன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
ஆலோசனை கூட்டம்
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், கோவிலுக்கு வருபவர்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்க வேண்டும் என்றும் கொரோனா தடுப்பு விதிகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார். மேலும் சனிப்பெயர்ச்சி திருவிழா நடத்துவது தொடர்பாக புதுச்சேரி இந்து சமய அறநிலையத் துறைச் செயலாளர், காரைக்கால் மாவட்ட ஆட்சியர், கோவில் செயல் அலுவலர் மற்றும் புதுச்சேரி துணைநிலைஆளுநர் கிரண் பெடி, மனுதார் மற்றும் தேவைப்படும் நபர்கள் அடங்கிய கூட்டத்தை கூட்டி முடிவெடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தார்.
கட்டாயம் வேண்டும்
அதன்பேரில் இது தொடர்பான கூட்டம் நேற்று நடந்தது. அதில், திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலுக்கு வரும் பக்தர்கள், 48 மணி நேரத்திற்கு முன்பு எடுத்த கொரோனா பரிசோதனை சான்றிதழை சமர்பிக்க வேண்டும். இல்லையென்றால் கோவிலுக்குள் செல்ல அனுமதி கிடையாது என முடிவெடுக்கப்பட்டது.இந்த முடிவை எதிர்த்து காரைக்காலை சேர்ந்த சிங்காரவேலன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு அவசர வழக்காக இன்று நீதிபதிகள் மகாதேவன் மற்றும் மஞ்சுளா அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
பண விரயம்
அப்போது மனுதாரர் தரப்பில், 'கோயில் நடவடிக்கைகளில் துணை நிலை ஆளுநர் தலையிட அதிகாரம் இல்லை. தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய விதிப்படி வெப்ப நிலை பரிசோதனை மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ள நிலையில், லட்சக்கணக்கான பக்தர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்து சான்றிதழை சமர்பிக்க வேண்டும் என்ற முடிவு பண விரயத்தை ஏற்படுத்திடும். இது முழுக்க முழுக்க சாத்தியமற்றது' என வாதிடப்பட்டது.
அதிரடி உத்தரவு
இந்த வாதங்களை கேட்ட நீதிபதிகள், திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கொரோனா பரிசோதனை சான்றிதழ் வைத்திருக்க வேண்டிய கட்டாயம் இல்லை. ஆனால் வெப்ப நிலை பரிசோதனை செய்ய வேண்டும். வெப்ப நிலை அதிகமாக இருக்கும் நபர்களுக்கு மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்க வேண்டும். கொரோனா அறிகுறிகள் இல்லாத பக்தர்களை மட்டும் கோவிலுக்கு அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கு விசாரணையை அடுத்த வாரத்துக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.