வழக்கறிஞர்களுக்கு வக்கீல் தொழில்தான் முதல் மனைவி.. ஹைகோர்ட் நீதிபதி சுப்ரமணியன் பேச்சு
புதுச்சேரி: வழக்கறிஞர்கள், வழக்கறிஞர் தொழிலை முதல் மனைவி போல பார்த்துகொண்டு, 24 மணி நேரமும் வழக்கறிஞர்களாகவே இருக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதி சுப்ரமணியன் அறிவுறுத்தியுள்ளார்.
புதுச்சேரி காலாப்பட்டில் உள்ள அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரியில் முன்னாள் மாணவர் சங்க துவக்க விழா, அந்த கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. துவக்க நிகழ்ச்சியில் மாநில முதலமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டு முன்னாள் மாணவர் சங்கத்தை தொடங்கி வைத்தார்.
மேலும் நிகழ்ச்சியில் புதுச்சேரி அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் படித்து முடித்து தற்போது, சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகளாக உள்ள சுப்ரமணியம், இளந்திரையன், புகழேந்தி ஆகியோர் கலந்துகொண்டு, தங்களின் பழைய கல்லூரி நினைவுகளை மாணவர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் மத்தியில் வெளிப்படுத்தி மகிழ்ச்சி அடைந்தனர்.
விழாவில் பேசிய மாநில முதலமைச்சர் நாராயணசாமி, புதுச்சேரியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரியை, சட்டப் பல்கலைக்கழகமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை மாநில அரசு எடுத்து வருவதாகவும், சென்னை உயர் நீதிமன்றத்தின் கிளையை புதுச்சேரியில் திறக்கக்கோரி மத்திய சட்டத்துறை அமைச்சரை சந்தித்து வலியுறுத்தி உள்ளதாக தெரிவித்தார்.
முதலமைச்சரை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சுப்ரமணியம், முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சியில் நீதிபதியாக கலந்துகொள்வது, மிக்க மகிழ்ச்சி அளிப்பதாகவும், வழக்கறிஞர்கள் வழக்கறிஞர் தொழிலை முதல் மனைவி போல் பார்த்துக்கொண்டு, 24 மணி நேரமும் வழக்கறிஞராக இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.