சிக்கன் ப்ரீயா கிடைச்சா.. கொரோனாவாவது.. ஒன்னாவது.. வாங்கி கடிங்கய்யா நல்லா!
புதுச்சேரி: கோழி இறைச்சியால் கொரோனா வைரஸ் பரவவில்லை என்பதை, பொது மக்களுக்கு உணர்த்தி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக புதுச்சேரியில் இறைச்சி கடை உரிமையாளர் ஒருவர் சிக்கன் 65 யை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கினார்.
நாளுக்கு நாள் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸால் உலக நாடுகள் மிகவும் அச்சத்தில் உள்ளன. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள், இந்த வைரஸ் தொற்றை பேரிடராக அறிவித்து பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இதனிடையே கொரோனா வைரஸ் கோழி இறைச்சியில் இருந்து பரவுவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இதனால் மக்கள் கோழி இறைச்சி சாப்பிடுவதை தவிர்த்து, மீன் மற்றும் ஆட்டு இறைச்சிகளை வாங்கத் தொடங்கியுள்ளனர்.
இதன்காரணமாக, கோழி இறைச்சியின் விற்பனை சரிந்துள்ளது. சிக்கன் மற்றும் முட்டையின் விலையும் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு குறைந்துள்ளது. இதனால் இந்த தொழிலை நம்பியுள்ளவர்களுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், புதுச்சேரி அருகே சுல்தான்பேட்டை பகுதியில் சிக்கன் கடை வைத்துள்ள நசீர் அகமது என்பவர், கோழி இறைச்சியால் கொரோனா வைரஸ் பரவவில்லை என்பதை பொது மக்களுக்கு உணர்த்தி விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, 'சிக்கன் 65 இலவசம்' என தனது கடையில் அறிவிப்பு செய்திருந்தார்.
இதனையறிந்த பொதுமக்கள் ஏராளமானோர் அந்த கடை முன்பு திரண்டு இலவசமாக 'சிக்கன் 65' வாங்கி சாப்பிட்டனர். மேலும் 50 ரூபாய்க்கு 30 முட்டைகளை முண்டியடித்து வாங்கிச் சென்றனர். மக்கள் ஒரே நேரத்தில் ஒன்று கூடியதால் விழுப்புரம் - புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் திடீரென்று போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதனிடையே புதுச்சேரியில் கடந்த ஒருவாரத்திற்கு முன்பு கிலோ 120 ரூபாய்க்கு விற்கப்பட்ட கறிக்கோழியின் விலை தற்போது கிலோ 65 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதே போல் 90 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த உயிர்க்கோழி தற்போது 45 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மேலும் ரூபாய் 4 வரை விற்கப்பட்டு வந்த முட்டையின் விலை தற்போது 1.45 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.