ஊரடங்கு உத்தரவை மீறினாரா முதல்வர் நாராயணசாமி.. புதுச்சேரியில் ஒரு சர்ச்சை
புதுச்சேரி: புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி ஊரடங்கு உத்தரவை மீறி தனது கட்சியினருடன் கூட்டமாக சென்று பொதுமக்களுக்கு அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்களை வழங்கியதற்காக, அவர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டுமென எதிர்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மத்திய அரசு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது. ஊரடங்கு உத்தரவை மீறுவோர் மீது நாடு முழுவதும் அந்தந்த மாநில போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அத்தியாவசியப் பணிகள் தவிர வேறு பணிக்காக வீட்டை விட்டு வெளியே வருபவர்களை போலீசார் விரட்டி அடித்து வருகின்றனர். மக்களைக் கட்டுப்படுத்துவதும் சிரமமாக இருக்கிறது.
இந்நிலையில் புதுச்சேரி லாஸ்பேட்டை நெசவாளர் நகரில் தடை உத்தரவை மீறி அப்பகுதி மக்களுக்கு புதுச்சேரி மாநில பாரதிய ஜனதா கட்சியின் தலைவரும், நியமன சட்டமன்ற உறுப்பினருமான சாமிநாதன் இலவச அரிசி வழங்கினார். இதனை வாங்குவதற்காக மக்கள் முண்டியத்துக்கொண்டு வந்தனர். இதனால் அங்கு நெரிசல் ஏற்பட்டது. மக்கள் யாரும் சமூக விலகலை கடைபிடிக்கவில்லை.
இதனைத்தொடர்ந்து லாஸ்பேட்டை போலீசார் சட்டமன்ற உறுப்பினர் சாமிநாதன் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். புதுச்சேரியில் இதுவரை ஊரடங்கு உத்தரவை மீறியதாக 381 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆயிரத்து 237 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே நேற்றைய தினம் கதிர்காமம் தொகுதியில் காங்கிரஸ் கட்சி பிரமுகர் ஒருவர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் முதலமைச்சர் நாராயணசாமி பங்கேற்றிருந்தார்.
அப்போது முதலமைச்சர் நாராயணசாமி ஊரடங்கு உத்தரவை மீறி தனது கட்சியினர் 10 க்கும் மேற்பட்டோருடன் வீடு வீடாக சென்று அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கினார். தற்போது இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மாநில முதலமைச்சரே ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் கூட்டமாக சென்று பொருட்களை விநியோகித்துள்ளதாகவும், முதலமைச்சர் மீது காவல்துறை உடனடியாக வழக்குப் பதிவு செய்ய வேண்டுமென எதிர்கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றனர்.
கொரோனா லாக் டவுன்: அதிகரிக்கும் குடும்ப வன்முறைகள் - ஜோதிட பரிகாரங்கள்
ஏற்கனவே காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஜான்குமார் தனது வீட்டின் முன்பு தொகுதி மக்களை திரட்டி இலவசமாக காய்கறிகளை வழங்கியதற்காக, இந்திய தண்டனை சட்டம் 269, 188 மற்றும் பேரிடர் மேலாண்மை சட்டம், தொற்று நோய் பரவுதல் தடுப்பு சட்டம் ஆகியவற்றின் கீழ் கிரிமினல் வழக்குகளை உருளையான்பேட்டை போலீசார் பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.