காலையில் முதல்வர் ஆலோசனை.. ராத்திரியில் கிரண் பேடி ஆய்வு.. வார்னிங் கொடுத்த நாராயணசாமி!
புதுச்சேரி: அதிகாரிகளை அழைத்து ஆய்வு என்னும் பெயரில் போட்டி அரசாங்கம் நடத்துவதை நிறுத்துங்கள் என முதலமைச்சர் நாராயணசாமி கிரண்பேடிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புதுச்சேரியில் இன்று இரவு புத்தாண்டை கோலாகலமாக கொண்டாடுவதற்காக தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் லட்சகணக்கானோர் புதுச்சேரியில் குவிந்துள்ளனர். இதனால் புதுச்சேரியில் எங்கு பார்த்தாலும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது.
இந்நிலையில் புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் எவ்வித சிரமுமின்றி புத்தாண்டை கொண்டாடிவிட்டு செல்வதற்காக, செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து நேற்று காலை முதலமைச்சர் மாவட்ட ஆட்சியர், காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளை அழைத்து ஆலோசனையில் ஈடுபட்டார்.
பாரதியாரின் குயில் தோப்புக்கு சோதனை.. போலி பத்திர மோசடி.. பெண் தாசில்தார் உட்பட 11 பேர் மீது வழக்கு
முதலமைச்சர் நாராயணசாமி ஆலோசனை நடத்தியதை அறிந்த துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, புத்தாண்டை கொண்டாடுவதற்காக கடற்கரையில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும், குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தும் கடற்கரை சாலையில் நேற்று இரவு சுமார் 2 கி.மீ தூரம் நடந்து சென்று ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது டிஜிபி பாலாஜி ஸ்ரீவத்சவா, மாவட்ட ஆட்சியர் அருண் மற்றும் காவல்துறை அதிகாரிகள் உடனிருந்தனர். அப்போது பல்வேறு ஆலோசனைகளை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அதிகாரிகளுக்கு வழங்கினார்.
காலையில் அதிகாரிகளை அழைத்து ஆலோசனை வழங்கிய முதலமைச்சர் நாராயணசாமி, இரவில் அதிகாரிகளை அழைத்து கிரண்பேடி ஆய்வில் ஈடுபட்டதால் ஆத்திரமடைந்தார். அதிகாரிகளும் யார் சொல்வதை நடைமுறைப்படுத்துவது என்ற குழப்பத்தில் உள்ளனர்.
இந்நிலையில் சமூக வலைதளத்தில் கிரண்பேடியை கடுமையாக சாடி பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார் முதலமைச்சர் நாராயணசாமி. அதில், புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி போட்டி அரசாங்கத்தை நடத்துவதுவதாகவும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் துணைநிலை ஆளுநருக்கென்று தனி அதிகாரம் இல்லை. புதுச்சேரி ஒன்றும் வடகிழக்கு மாநிலம் அல்ல. சட்டத்தை மதித்து போட்டி அரசாங்கம் நடத்துவதை நிறுத்துங்கள் என கிரண்பேடியை கடுமையாக சாடி பதிவிட்டுள்ளார்.
இதனால் இவர்கள் இருவருக்குமான சண்டை மேலும் வலுத்துள்ளது. புத்தாண்டு கொண்டாட்டத்திலும் ரெண்டு பேரும் சண்டை போட்டிப்பிங்களான்னு புதுச்சேரியில் உள்ள சமூக ஆர்வலர்கள் முனுமுனுத்து வருகின்றனர்.