அந்தரத்தில் நின்று .. வயரில் சிக்கிய மரக்கிளையை அகற்றியவர்.. புதுவை மின் ஊழியர் அல்ல!
அந்தரத்தில் நின்று .. வயரில் சிக்கிய மரக்கிளையை அகற்றியவர்.. புதுவை மின் ஊழியர் அல்ல!
புதுச்சேரி: புதுச்சேரி நகர பகுதியில் உள்ள மின் ஒயரில் மாட்டிய மரக்கிளையை மின் கம்பியில் அந்தரத்தில் நின்றபடி மின் ஊழியர் அகற்றியதாக வந்த செய்தி தவறானது என்று தெரிய வந்திருக்கிறது.
வங்ககடலில் உருவான நிவர் புயல் புதுச்சேரி மரக்காணம் இடையே நவம்பர் 26ம் தேதி அதிகாலை கரையை கடந்தது. புயல் காரணமாக புதுச்சேரி, கடலூரில் இடைவிடாமல் கனமழை கொட்டித்தீர்த்தது. இதன் காரணமாக புதுச்சேரியின் பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன.
மேலும் கன மழையால் குடியிருப்பு பகுதிகள் மற்றும் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி உள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தொடர் கனமழை காரணமாக புதுச்சேரியின் முக்கிய சாலைகளான புஸ்சி வீதி, இந்திராகாந்தி சந்திப்பு மற்றும் புதுச்சேரி - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை, சென்னை கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட சாலைகளில் மழை நீர் தேங்கி குளம் போல் காட்சி அளித்தது.
இதேபோல் பலத்த காற்றின் காரணமாக பல்வேறு இடங்களில் சாலை ஓரங்களில் இருந்த மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் வாகன ஓட்டிகள் பாதிப்புக்குள்ளாகினர். மேலும் தாழ்வான பகுதிகளிலும், அங்குள்ள வீடுகளிலும் மழைநீர் தேங்கியுள்ளது. மின்கம்பங்களும் பாதிக்கப்பட்டன.
புயல் கரையை கடந்த காரணத்தால் பாதுகாப்பிற்காக மின் நிறுத்தம் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் மின்விநியோகம் மழையால் பல இடங்களில பாதிக்கப்பட்டது. மரங்கள் முறிந்து விழுந்ததால் மின்கம்பங்கள் பாதிக்கப்பட்டு மின்சாரமும் தடை பட்டது.
இந்த நிலையில்தான் ஒரு வீடியோ வலம் வந்தது. அந்த வீடியோவில் மின் கம்பியில் ஏறியபடி உயிரைப் பணயம் வைத்து ஒரு மின்சார ஊழியர் வயரில் விழுந்து கிடந்த மரக்கிளையை தூக்கி கீழே போட்டு விட்டு அனாயசமாக இறங்கி வருவது போல அந்த வீடியோ இருந்தது.
அந்த ஊழியர் புதுச்சேரியைச் சேர்ந்த மின் ஊழியர் என்றும், உப்பளம் என்ற பகுதியில் இந்த சம்பவம் நடந்ததாகவும் அந்த வீடியோவுடன் செய்தி வலம் வந்தது. இதை அனைத்து ஊடகங்களும் செய்தியாக வெளியிட்டன. புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியும் கூட அந்த ஊழியரைப் பாராட்டி பேசியிருந்தார்.
ஆனால் அந்த வீடியோ புதுச்சேரியில் நடந்த சம்பவம் அல்ல என்று தற்போது தெரிய வந்துள்ளது. உண்மையில் அது தெலங்கானா மாநிலத்தில் நடந்த சம்பவம் என்றும் புதுச்சேரி அல்ல என்றும் தெரிய வந்துள்ளது. யாரோ சிலர் போலியான தகவலை பரப்பியிருப்பதும் தெரிய வந்துள்ளது.