சிஏஏவிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு.. முதல்வர் நாராயணசாமி அதிரடி!
Recommended Video
புதுச்சேரி: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக புதுச்சேரி அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி, புதுச்சேரி மாநிலத்தில் எங்கள் ஆட்சியை கலைத்தாலும் கவலையில்லை. ஒருபோதும் குடியுரிமை திருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம்.
மக்களுக்காக தான் ஆட்சி. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான தீர்மானத்தை சட்டப்பேரவையில் ஏகமனதாக நிறைவேற்றியுள்ளோம். ஆனால் குடியுரிமை சட்டம் தொடர்பாக எதிர்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் தனது நிலைப்பாட்டை தெரிவிக்கவில்லை. என்.ஆர்.காங்கிரஸ் பாஜகவின் கூட்டணியில் இருக்கிறதா? என்பது குறித்து தனது கருத்தை சட்டமன்றத்தில் தெரிவிக்க வேண்டும்.
அதிமுக பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணியில் உள்ளதால், அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் அவைக்கு வரவில்லை. ஆனால் பாஜகவிற்கு ஜால்ரா போடும் வேலையை தான் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி செய்கிறது. குடியுரிமை திருத்த சட்டத்தால் பாஜகவை மக்கள் எதிர்த்துள்ளனர் என்பதை டெல்லி தேர்தல் காட்டுகிறது.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக ஏற்கனவே 147 வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் உள்ளன. தேவை ஏற்பட்டால் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக புதுச்சேரி அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.