விளக்கேற்றுவதால் பயனில்லை.. மக்களுக்கு தேவையானதை செய்யுங்க மோடி.. நாராயணசாமி
புதுச்சேரி: பிரதமர் மோடியின் வேண்டுகோள்கள் அனைத்தையும் நிறைவேற்றுகின்றோம். ஆனால் இந்த இக்கட்டான தருணத்தில் கை தட்டுவதாலோ, விளக்கு ஏற்றுவதாலோ எந்தவித பயனும் இல்லை. நாட்டு மக்களுக்கு பயனுள்ள உதவிகளை செய்ய பிரதமர் மோடி முன்வரவேண்டும் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
Recommended Video
பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்று, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி சரியாக 9 மணியளவில் தனது வீட்டில் உள்ள அனைத்து விளக்குகளையும் அணைத்து விட்டு, வீட்டு மாடியில் உள்ள மாடத்திற்கு வந்து கையில் மெழுகுவர்த்தி ஏந்தியவாறு 9 நிமிடங்கள் நின்றிருந்தார்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி, பிரதமரின் வேண்டுகோளை ஏற்று தானும் புதுச்சேரி மாநில மக்களும் தங்களின் ஒற்றுமையை காட்டியுள்ளார்கள். பிரதமரின் வேண்டுகோளை கடைபிடிக்க வேண்டிய கடமை இருந்தாலும், நாட்டு மக்கள் அனைவரும் தேசபக்தியுடன் ஒற்றுமையாக உள்ளார்கள். கொரோனா தொற்று தாக்கம் அதிகரித்து வருகின்றது.
இந்த சூழ்நிலையில் இந்திய மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று பிரதமர் யோசிக்க வேண்டும். நோயை கட்டுப்படுத்த வேண்டிய கடமை பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசுக்கு உள்ளது. விளக்கு ஏற்றுவதாலோ, கைதட்டுவதாலோ இந்த நோய்க்கு தீர்வு காணமுடியாது. நாங்கள் இந்த விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டியதில்லை.
கொரோனா நோய் சிகிச்சைக்கு வெண்டிலேட்டர் உள்ளிட்ட எந்தவித மருத்துவ உபகரண பொருட்களும் கிடைக்கவில்லை. இவைகள் எல்லாம் கிடைக்க பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும். நாட்டு மக்களுக்கு கொடுக்க வேண்டிய நிவாரணத்தை மத்திய அரசு கொடுக்க வேண்டும். அதேபோல் மாநிலங்களுக்கான நிதியையும் அளிக்க வேண்டும். நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த பிரதமர் மோடி பொருளாதார நிபுணர்களை கலந்தாலோசிக்க வேண்டுமே தவிர அறிவிப்புகளால் எந்தவித பலன்களும் இல்லை.
கொரோனா தாக்கத்தால் பல்வேறு மாநிலங்கள் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றது. இந்த நிலையில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுவதோடு பொருளாதார மேதைகளை கலந்தாலோசித்து, வீழ்ந்த இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்க என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை பிரதமர் மோடி முதலில் செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.