ஹைட்ரோ கார்பன் திட்டம்.. புதுச்சேரி அரசுக்கு மத்திய அரசு தகவல்.. கொதித்த நாராயணசாமி!
புதுச்சேரி: புதுச்சேரி மாநில அரசுக்கு தெரியாமல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தக்கூடாது என மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருப்பதாக முதல்வர் நாராயணசாமி தகவல். மீறி இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் மாநில அரசே தடுத்து நிறுத்தும் எனவும், எந்த விளைவுகளையும் சந்திக்க தயாராக இருப்பதாக முதல்வர் நாராயணசாமி சவால் விடுத்துள்ளார்.
இது குறித்து சட்டப்பேரவை வளாகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் நாராயணசாமி, வேதாந்தா நிறுவனம் மூலம் புதுச்சேரி மாநிலம் பாகூரில் 2 சதுர கி.மீட்டர் தூரத்திற்கும், காரைக்கால் மாவட்டத்தில் 39 சதுர கி.மீட்டர் தூரத்திற்கும் ஹைட்ரோ கார்பன் திட்டம் நிறைவேற்றப்பட இருப்பதாக மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளதாக தெரிவித்தார் நாராயணசாமி.
ஹைட்ரோ கார்பன் எடுக்க திட்டமிடப்பட்டுள்ள இடங்கள் அனைத்தும் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகள். இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் நிலத்தடி நீர் முற்றிலுமாக பாதிப்பு ஏற்படும். அதன் ரசாயன கலவையால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும். மேலும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் கடல் நீர் விவசாய நிலங்களுக்குள் உள்ளே புகும் அபாயம் ஏற்படும்.
ஏற்கனவே இந்த திட்டத்தை செயல்படுத்த வேதாந்தா நிறுவனத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என மத்திய அரசு கேட்டதற்கு புதுச்சேரி அரசு அனுமதி வழங்காமல் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் தற்போது மாநில அரசின் அனுமதி இல்லாமல் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.
மாநில அரசின் உரிமையை பறிப்பதாக உள்ள இச்செயல், மத்திய அரசின் சர்வாதிகார போக்கை காட்டுகின்றது. ஆகவே மாநில அரசுக்கு தெரியாமல் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால், அதை மாநில அரசே தடுத்து நிறுத்தும். எனவே உடனடியாக இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்று மத்திய பெட்ரோலிய அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளதாக தெரிவித்தார். மேலும் இதையும் மீறி ஹைட்ரோ கார்பன் செயல்படுத்த முயற்சித்தால் எந்த விளைவுகளையும் சந்திக்க தயாராக இருப்பதாக முதல்வர் நாராயணசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியாளர் சந்திப்பின்போது உடனிருந்த கல்வி அமைச்சர் கமலக்கண்ணனிடம் செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளிக்கையில், புதுச்சேரியில் 5 ஆம் வகுப்பு மற்றும் 8 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தும் திட்டம் ஏதும் தற்போது இல்லை. பழைய முறையே தொடரும். தேர்வுகள் நடக்கும் பள்ளிகளில் வேறு பள்ளி ஆசிரியர்களே தேர்வு கண்காணிப்பாளராக செயல்படுவார்கள் என தெரிவித்தார்.