கொரோனா நிவாரண நிதி 2000.. நாளை முதல் வழங்கப்படும்.. முதலமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் கொரோனா நிவாரண நிதி ரூபாய் 2 ஆயிரம் ரூபாய் நாளை முதல் அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடந்த 23 ஆம் தேதி திங்கட்கிழமை முதல் புதுச்சேரி மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.
புதுச்சேரியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளால், அமைப்புசாரா தொழிலாளர்கள், கட்டிட தொழிலாளர்கள், ஆட்டோ, ரிக்சா ஓட்டுநர்கள், விவசாயிகள், மீனவர்கள், கூலி வேலை செய்பவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வேலையிழந்துள்ளனர்.
மேலும் ஊரடங்கு உத்தரவால் புதுச்சேரி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கொரோனாவால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால், புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 2 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவித்தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் நாராயணசாமி கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் இன்று நடைபெற்றது. சட்டப்பேரவையில் கொரோனா அச்சுறுத்தலை தொடர்ந்து அரசு எடுத்த நடவடிக்கைகளை முதல்வர் நாராயணசாமி அறிக்கையாக வாசித்தார். அதில், கொரோனா தொற்றால் சிகிச்சை பெற புதுச்சேரி, காரைக்காலில் 21 வெண்டிலேட்டர்கள் தற்போது உள்ளன. படுக்கைகளும் தயாராக உள்ளன. கொரோனா தொற்று இருப்பதை உறுதி செய்யும் மையங்கள் புதுச்சேரியில் 4 ம், காரைக்காலில் இரண்டும் உள்ளன.
புதுச்சேரியில் இதுவரை ஒருவர் கூட கரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த மாஹே பிராந்தியத்தை சேர்ந்த மூதாட்டி ஒருவரும் குணமடைந்துவிட்டார். சுகாதாரத்துறை ரூபாய் 7.5 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. பேரிடர் துறைக்கு ரூபாய் 12.5 கோடி கொரோனா அச்சுறுத்தலை கட்டுப்படுத்த ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசிடம் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த புதுச்சேரி்ககு ரூபாய் 995 கோடி நிதிக்கோரி கடிதம் எழுதியுள்ளேன்.
மேலும் கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள புதுச்சேரி மக்களுக்கு உதவி செய்வதற்காக, புதுச்சேரியில் உள்ள அனைத்து குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் ரூபாய் 2 ஆயிரம் தர முடிவு எடுத்தோம். அத்தொகை நாளை முதல் அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.
புதுச்சேரியில் சமூக கட்டுப்பாட்டுடன் 85 சதவீதத்தினர் உள்ளனர். மீதமுள்ளோரும் கடைபிடிக்கவேண்டும். முதலில் சட்டமன்ற உறுப்பினர்களும் கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.