உயிருக்குப் போராடிய குழந்தை.. ஆம்புலன்ஸ் டிரைவரின் அலட்சியம்.. பலியான பரிதாபம்.. மருத்துவமனை சூறை
புதுச்சேரி: புதுச்சேரியில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த குழந்தையை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற ஆம்புலன்ஸ் ஓட்டுநரால், இரண்டு வயது குழந்தை உயிரிழந்தது.
இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள், மருத்துவமனையின் கண்ணாடிகளை உடைத்து, குழந்தையின் சடலத்தை சாலையின் நடுவே வைத்து மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி அருகே தமிழக பகுதியான பனையடிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் இன்பரசன் - முத்தமிழ் தம்பதியினர். இவர்களது இரண்டு வயது குழந்தை மித்ரனுக்கு நேற்று வயிற்றுபோக்கு ஏற்பட்டதால், அருகில் உள்ள புதுச்சேரி மாநிலம் நெட்டப்பாக்கம் கிராமத்தில் இயங்கி வரும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்து சிகிச்சை அளித்துள்ளனர்.
மருத்துவ நிபுணர் குழு அமைக்க கோரிய அப்பல்லோ மனு மீது வெள்ளியன்று விசாரணை.. உச்சநீதிமன்றம்
அங்கு குழந்தையின் உடல்நிலை மோசமானதை தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி நகரப் பகுதியில் உள்ள ராஜீவ் காந்தி குழந்தைகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு மருத்துவர்கள் குழந்தையின் பெற்றோர்களிடம் அறிவுறுத்தியுள்ளனர். இதற்காக ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்த அரசு ஆம்புலன்ஸையும் மருத்துவர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.
இதனிடையே ஆம்புலன்ஸ் ஓட்டுநர் குழந்தையை மருத்துவர்கள் பரிந்துரை செய்த அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல், அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு குழந்தை இறந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநரின் அலட்சியத்தாலும், அரசு மருத்துவமனையில் முறையாக சிகிச்சை அளிக்காததாலும்தான் குழந்தை இறந்ததாக கூறி குழந்தையின் உறவினர்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தின் கண்ணாடிகளை உடைத்து, குழந்தையின் சடலத்தை புதுச்சேரி - மடுகரை சாலையின் நடுவே வைத்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து அங்கு வந்த நெட்டப்பாக்கம் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை களைய செய்தனர். குழந்தை இறந்தது தொடர்பாக நெட்டப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
குழந்தையை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றது குறித்து ஆம்புலன்ஸ் ஓட்டுநரிடமும் தனியாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. புதுச்சேரியில் ஆம்புலன்ஸ் ஓட்டுநரின் அலட்சியத்தால் இரண்டு வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.