சுரைக்காய் குடுவையில் கிறிஸ்துமஸ் குடில்.. தேங்காய் நாரில் இயேசு.. அரசுப் பள்ளி மாணவர்கள் அசத்தல்!
புதுச்சேரி: சுரைக்காய் குடுவையில் கிறிஸ்துமஸ் குடில் மற்றும் ஏசுநாதரின் வடிவத்தை செய்து அசத்தியுள்ளனர் அரசு பள்ளி மாணவர்கள்.
புதுச்சேரி சேலியமேடு பகுதியில் அமைந்துள்ள கவிஞரேறு வாணிதாசன் அரசு உயர்நிலைப்பள்ளியில் உமாபதி என்பவர் நுண்கலை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் இங்கு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இயற்கையிலிருந்து கிடைக்கும் பனை மட்டை, பாக்கு மட்டை, சுரைக்காய் குடுவை, தென்னங்கீற்று போன்ற பொருட்களைக் கொண்டும் பல்வேறு விதமான கலைப்பொருட்களை உருவாக்குவது குறித்து பயிற்சி அளித்து வருகிறார்.
கலைத்திறன்
இப்படி வித்தியாசமான பயிற்சியின் மூலமாக மூலம் மாணவ, மாணவிகள், கற்பனைக்கும் எட்டாத கலைநயமிக்க பொருட்களை உருவாக்கி அசத்தி வருகின்றனர்.
வீணாக்காமல்
பயன்படாத பொருட்கள் மற்றும் இயற்கை தரும் பொருட்களை கொண்டு நகை வடிவங்கள், போர்வீரர்கள், தெருக்கூத்து கலைஞர்கள், விநாயகர், தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்கள், விலங்குகள் என 500க்கும் மேற்பட்ட கலைப்பொருட்களை மாணவர்கள் உருவாகியுள்ளனர்.
பல்வேறு பள்ளிகள்
மேலும் புதுச்சேரியில் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களும் விடுமுறை நாட்களில் இங்கு வந்து கலை பொருட்களை செய்வது தொடர்பான பயிற்சியை பெற்று வருகின்றனர்.
மட்டை தென்னங்கீற்று
மேலும் இப்பள்ளியில்எட்டாம் வகுப்பு, ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் தங்கள் பள்ளியில் மட்டுமல்லாது, பல பள்ளி, கல்லூரிகளுக்கும் சென்று இயற்கையிலிருந்து கிடைக்கும் மட்டை, தென்னங்கீற்று போன்று பொருட்களை கொண்டு, கலைப்பொருட்களை உருவாக்குவது குறித்த பயிற்சியையும் அளித்து வருகின்றனர்.
சுரைக்காய் குடில்
தற்போது கிறிஸ்துமஸ் பண்டிகையை வரவேற்கும் விதமாக சுரைக்காய் குடுவை மற்றும் தேங்காய் நாய்களை கொண்டு கிறிஸ்துமஸ் குடில் அமைத்து அச்சத்தியுள்ளனர் இப்பள்ளியின் மாணவர்கள்.
8 மணி நேரத்தில் கலைப்படைப்புகள்
9 ஆம் வகுப்பு பயிலும் 5 மாணவர்கள் இணைந்து 8 மணி நேரத்தில் இந்த கிறிஸ்துமஸ் குடிலை செய்து முடித்துள்ளனர். இது காண்போர் கண்களுக்கு விருந்தளிக்கு வகையில் அமைந்துள்ளது.
பாராட்டலாமே
இயற்கையாக கிடைக்கும் பொருட்களை கொண்டு கலைநயம்மிக்க பொருட்களை உருவாக்கி வரும் மாணவர்களின் இந்த முயற்சி பாராட்டுக்குரியதே. இதே போல மற்ற பள்ளி மாணவ மாணவியரும் செய்து தத்தமது கலைத் திறனை வளர்த்துக் கொள்ளலாம்.. கூடவே சுற்றுச்சூழல் விழிப்புணர்வுக்கும் உறுதுணையாக இருக்கலாம்.