கிரண் பேடி வந்தாகணும்.. அதுவரை தர்ணா தொடரும்.. நாராயணசாமி அதிரடி
புதுச்சேரி: துணை நிலை ஆளுநர் கிரண் பேடி புதுச்சேரி திரும்பும் வரை எங்களது தர்ணா தொடரும் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி திட்டவட்டமாக அறிவித்துள்ளார். இதனால் புதுச்சேரி பரபரப்பு இப்போதைக்கு ஓயாது என்று தெரிகிறது.
துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில இன்று மூன்றாவது நாளாக ஆளுநர் மாளிகை வெளியே தர்ணா போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் போராட்டத்தை அடுத்தகட்டதற்கு கொண்டு செல்வது குறித்து முதலமைச்சர் நாராயணசாமி அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி போராட்டம் தொடரும் என அறிவித்தார்.
அவர் கூறுகையில், துணைநிலை ஆளுநர் கிரண்பேடி புதுச்சேரிக்கு திரும்பி மக்கள் நலதிட்டங்களை நிறைவேற்றும் வரை ஆளுநர் மாளிகை எதிரே நடைபெற்று வரும் தர்ணா போராட்டம் தொடரும்.
காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி சார்பில் புதுச்சேரி முழுவதும் 12 இடங்களில் உண்ணாவிரதம், பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவருக்கு தந்தி அனுப்பும் போராட்டம், சிறை நிரப்பும் போராட்டம் என பல்வேறு வடிவங்களில் போராட்டத்தை தீவிரப்படுத்த உள்ளோம் என்று அறிவித்தார்.
நாராயணசாமி போராட்டத்தைத் தொடங்கியதும் புதுச்சேரியை விட்டு வெளியேறினார் கிரண் பேடி. டெல்லி சென்றுள்ள துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அங்கு நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட பின் வரும் 20 ஆம் தேதி இரவுதான் டெல்லியிலிருந்து புதுச்சேரி திரும்புகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் மேலும் 5 நாட்களுக்கு வரும் 21 ஆம் தேதி வரை தர்ணா போராட்டம் தொடரவுள்ளது.