நான் தர்ணா நடத்துகிறேன்.. கிரண் பேடி சைக்கிள் ஓட்டி விளையாடுகிறார்.. நாராயணசாமி டென்ஷன்
Recommended Video
புதுச்சேரி: நான் தர்ணாவில் ஈடுபட்டிருக்கும் நிலையில் அதைப் பற்றிக் கவலைப்படாமல் துணை நிலை ஆளுநர் கிரண் பேடி ஆளுநர் மாளிகை வளாகத்திற்குள் சைக்கிள் ஓட்டியது கண்டனத்துக்குரியது என்று முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.
மக்கள் நலத்திட்டங்கள் தொடர்பான 39 கோப்புகளுக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் அளிக்கக்கோரி இன்று 6வது நாளாக ஆளுநர் மாளிகை முன்பு முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் தொடர் தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தர்ணாவில் ஈடுபட்டு வரும் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின் செயல்பாடுகள் குறித்து முறையிட காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் அஹ்மத் பட்டேல் மற்றும் முகுல் வாஸ்னிக் ஆகியோர் இன்று டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்திக்க உள்ளதாகவும், தன்னிடம் கோப்புகள் நிலுவையில் இல்லை என தெரிவிக்கும் கிரண்பேடி ஏற்கனவே பஞ்சாலை ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள ஊதியம், காவலர் வயது வரம்பு, விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கி கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலன் தொடர்பான கோப்புகளை திருப்பி அனுப்பி இருப்பதாக தெரிவித்தார்.
மேலும் ஏனாம் பகுதியில் உள்ள கோதாவரி ஆற்றங்கரையோரம் தடுப்பு சுவர் கட்ட மத்திய அரசு ரூபாய் 137கோடி நிதி அளிக்க ஓப்புதல் அளித்தும் அந்த நிதியை வழங்கக்கூடாது என துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கடிதம் எழுதி தடுத்து நிறுத்தி இருப்பதாகவும் குற்றம்சுமத்தினார்.
தொடர்ந்து பேசிய அவர், மக்களின் நலனுக்காக ஆளுநர் மாளிகை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், ஆளுநர் மாளிகைக்குள் சைக்கிளில் பவனி வருவது நாட்டில் ஜனநாயகத்திற்கு கொடுக்கின்ற மரியாதையாக தெரிகிறது எனவும், ஆளுநரின் இந்த செயலை கண்டனத்துக்குரியது எனவும், ஆளுநரின் செயல்பாடுகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் எண்ணங்களை புறக்கணித்துள்ளார் என்றார்.
பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார்
இதற்கிடையே, இன்று மாலை 5 மணிக்கு ராஜ்நிவாஸில் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வருமாறு கிரண் பேடி அழைப்பு விடுத்து நாராயணசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி, பேச்சுவார்த்தைக்கு தனது அமைச்சர்களுடன் செல்லவுள்ளதாகவும், போய் விட்டு வந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசுவதாகவும் தெரிவித்தார்.