புதுச்சேரியில் பரபரப்பு.. மோடியின் உருவப்படம் எரிப்பு.. ஒரே தள்ளு, முள்ளு
Recommended Video
புதுச்சேரி: ஆட்சிக்கு வர மட்டோம் என்பதற்காக வாக்குறுதிகளை பாஜக அள்ளி வீசுவதாகவும், பாஜகவிற்கு ஆட்சியின் இறுதிக்காலம் நெருங்கி கொண்டிருப்பதாகவும் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
மகாத்மா காந்தியின் நினைவு நாளன்று உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள அகில பாரத ஹிந்து மகா சபா அமைப்பை சேர்ந்தவர்கள் மகாத்மா காந்தியின் உருவ பொம்மையை சுட்டு தீயிட்டு எரித்தனர்.
இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கக்கோரி காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் கோரிக்கை வைத்திருந்த நிலையில் அவர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை.
கண்டன ஆர்ப்பாட்டம்
இந்நிலையில் காந்தியடிகளின் உருவ பொம்மையை துப்பாக்கியால் சுட்டு, எரித்த இந்துத்துவா அமைப்பினரை கைது செய்ய நடவடிக்கை எடுக்காத உத்திரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்தனாத்தை கண்டித்து, புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
முதல்வர் பங்கேற்பு
தலைமை தபால் நிலையம் அருகே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநில முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள், நமச்சிவாயம், கந்தசாமி, ஷாஜகான், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 300 க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் கலந்துகொண்டு மகாத்மாவை இழிவு படுத்திய நபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்காத உத்திர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் மத்திய பாஜக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
மோடியின் உருவப்படம் எரிப்பு
ஆர்ப்பாட்டம் முடிந்ததை தொடர்ந்து, முதல்வர் மற்றும் அமைச்சர்கள் சென்ற பின்னர், காங்கிரஸ் கட்சியினர் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் உருவப்படத்தை எரித்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தடுக்க முயன்ற போது இரு தரப்பினருக்குமிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.
இறுதி காலம்
முன்னதாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய முதல்வர் நாராயணசாமி, சுதந்திரம் குறித்து தெரியாமல் காந்தியடிகளை பாஜகவினர் இழிவுபடுத்துவதாகவும், ஆட்சிக்கு மீண்டும் வர மாட்டோம் என்பதற்காக வாக்குறுதிகளை பாஜக வினர் அள்ளி விசும் நிலையில், அவர்களது ஆட்சியின் இறுதி காலம் நெருங்கிக் கொண்டிருப்பதாக தெரிவித்தார்.
வாக்களிக்க மாட்டார்கள்
மேலும் தேர்தல் வரவுள்ள நிலையில் விவசாயிகளுக்கு மத்திய திட்டங்களை அறிவித்தாலும், அவர்கள் ஏமாந்து வாக்களிக்க மாட்டார்கள் என கூறிய அவர், மத்தியில் உள்ள பாஜக ஆட்சியை தூக்கி எறிந்துவிட்டு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை பிரதமராக்க கட்சியினர் பாடுபட வேண்டுமென கேட்டுக்கொண்டார்.