மகாராஷ்டிரா: இன்னும் ஒரு வாரத்தில் புதிய ஆட்சி அமையும்.. புதுவை முதல்வர்
புதுவை: மகாராஷ்டிரத்தில் இன்னும் ஒரு வாரத்தில் புதிய ஆட்சி அமையும் என புதுவை முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
மகாராஷ்டிரத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் எந்தவொரு கட்சியும் ஆட்சி அமைக்க முடியவில்லை. இதையடுத்து மகாராஷ்டிரத்தில் ஆட்சி அமைக்க பாஜகவை ஆளுநர் கோஷ்யாரி அழைத்தார்.
ஆனால் பாஜகவோ முடியாது என கூறிவிட்டது. இதையடுத்து சிவசேனாவை அழைத்தார். அக்கட்சியோ ஆதரவு கடிதம் கொடுக்க இரு நாட்கள் கால அவகாசம் கேட்டு அதற்கு ஆளுநர் மறுத்துவிட்டார்.
ஜனாதிபதி ஆட்சி
பின்னர் தேசியவாத காங்கிரஸ் கட்சியை அழைத்தது. அக்கட்சியும் 2 நாட்கள் காலஅவகாசம் கோரிய நிலையில் அங்கு நேற்று முன் தினம் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
அவகாசம்
இதற்கு சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த நிலையில் மகாராஷ்டிரத்தில் அமல்படுத்தப்பட்ட குடியரசு தலைவர் ஆட்சி குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறுகையில், மகாராஷ்டிரத்தில் ஆட்சி அமைக்க அவகாசம் வழங்கியது போல் வேறு எந்த மாநிலத்திலும் இதுவரை வழங்கியதில்லை.
நாராயணசாமி
எந்த கட்சியிடம் பெரும்பான்மை உள்ளதோ அக்கட்சி ஆளுநரை அணுகலாம் என கூறியிருந்தார். இந்த நிலையில் நேரு பிறந்ததினத்தையொட்டி புதுவையில் அவரது சிலைக்கு முதல்வர் நாராயணசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
ஆட்சி அமைக்கும்
அப்போது அவர் கூறுகையில் மகாராஷ்டிரத்தில் காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைக்கும். இன்னும் ஒரு வாரத்தில் மகாராஷ்டிரத்தில் ஆட்சியை அமைக்கும் என தெரிவித்தார்.