புதுவை மக்கள் பொங்கி எழுந்தால்.. கிரண்பேடி இருக்கும் இடம் தெரியாமல் போய்விடுவார்- நாராயணசாமி
புதுவை: புதுவை மாநில மக்களுக்கு பொங்கல் பண்டிகைக்கு இலவச பொருட்கள் வழங்குவதற்கான கோப்புகள் அனுப்பப்பட்டும் அதை ஆளுநர் திருப்பி அனுப்புவதை முதல்வர் நாராயணசாமி கண்டித்துள்ளார்.
இதுகுறித்து நாராயணசாமி சட்டசபை வளாகத்தில் பேசுகையில் புதுவையில் மாநில மக்களுக்கு பொங்கல் பண்டிகைக்கு இலவச பொருட்கள் வழங்குவதற்கான கோப்புகள் தயார் செய்து அக்டோபர் மாத இறுதியில் ஆளுநருக்கு அனுப்பப்பட்டது.
ஒப்புதல் தர வேண்டும்
ஆனால் ஆளுநர் கிரண்பேடியோ கோப்புகளை திருப்பி அனுப்பிவிட்டார். தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுபடி அனைத்து தரப்பு மக்களுக்கும் இலவச பொங்கல் பரிசு வழங்க கிரண்பேடி ஒப்புதல் தர வேண்டும்.
விளைவுகள்
இல்லையென்றால் கிரண்பேடி புதுச்சேரி மக்களுக்கு விரோதி போல் செயல்படுகிறார். கிரண்பேடி தொடர்ந்து தரம் தாழ்ந்து செயல்படுகிறார். மக்கள் நல திட்டங்களை முடக்குவதன் மூலம் ஆளும் கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் இலவச பொருட்களை தடுத்து நிறுத்தினால் அதற்கான விளைவுகளை சந்திக்க நேரிடும்.
விளைவுகள்
ஆளுநர் கிரண்பேடியின் நடவடிக்கைகள் பற்றி பிரதமர் மோடியிடம் பலமுறை புகார் அளித்தும் அவர் மீது பிரதமர் நடவடிக்கை எடுக்காமல் உள்ளார். மக்கள் உரிமைகளை தடுக்கும் யாராக இருந்தாலும் அவர்கள் கடும் விளைவுகளை சந்திப்பர்.
வீட்டு வரி
புதுவை மக்கள் பொங்கி எழுந்தால் கிரண்பேடி இருக்கும் இடம் தெரியாமல் போய்விடுவார். புதுவையில் வீட்டு வரி 25 சதவீதம் அனைத்து வீடுகளுக்கும் குறைக்கப்பட்டுள்ளது என நாராயணசாமி தெரிவித்தார்.