5 மணி நேரமாக நாராயணசாமி தர்ணா.. போராட்டக் களத்தில் பைல் பார்த்து கையெழுத்து போட்டு கலக்கல்!
புதுச்சேரி: துணை நிலை ஆளுநருக்கு எதிரான முதலமைச்சர் நாராயணசாமியின் தர்ணா போராட்டம் 5 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்து வருகிறது.
தர்ணாவில் அமர்ந்தாவாறே அரசு கோப்புகளில் கையெழுத்திட்டு, அரசு பணிகளை கவனித்து வருகிறார் முதலமைச்சர் நாராயணசாமி. முதலமைச்சரின் இந்த தர்ணா போராட்டத்தில் சபாநாயகர் வைத்தியலிங்கம் பங்கேற்றுள்ளார்.
புதுச்சேரி துணை நிலை ஆளுநராக உள்ளவர் கிரண்பேடி. இவர் முதல்வரை விட தனக்குத் தான் அதிகாரம் அதிகம் என்று கூறி அதிரடியாக சில நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
முதல்வர் தலைமையில் தர்ணா
அந்த வகையில், தலைக்கவசம் அணிவது கட்டாயம் என்ற முதல்வர் உத்தரவுக்கு எதிராக மற்றொரு அறிவிப்பு வெளியானதால் மோதல் முற்றி உள்ளது. துணை நிலை ஆளுநருக்கு எதிரான போராட்டம் புதுச்சேரி முழுவதும் தீவிரமடைந்து வருகிறது. ஆளுநர் மாளிகை முன் முதல்வர் நாராயணசாமி தலைமையில் போராட்டம் தொடர்கிறது.
தொண்டர்கள் போராட்டம்
புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் ஆளுநரை கண்டித்து உருவப் பொம்மைகள் எரிக்கப்படுகின்றன. முதல்வர் நாராயணசாமியை நேரடியாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் மத்திய படையை அனுப்ப கிரண்பேடி கோரிக்கை விடுத்துள்ளார். இதனையடுத்து, மத்திய படை நாளை புதுச்சேரிக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முதல்வர் திட்டவட்டம்
5 மணி நேரத்திற்கும் மேலாக முதல்வர் நாராயணசாமியின் போராட்டம் தொடர்ந்து வருவதால், அவ்வப்போது போலீஸாரிடம் வந்து நிலவரம் குறித்து ஆளுநர் கிரண் பேடி விசாரித்து வருகிறார். முதல்வர் நாராயணசாமி போராட்டம் காரணமாக கிரண் பேடியால் ஆளுநர் மாளிகையை விட்டு வெளியில் வர முடியவில்லை என கூறப்படுகிறது. 39 கோரிக்கைகளை நிறைவேறினால் தான் போராட்டம் வாபஸ் என முதல்வர் நாராயணசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
மமதா ஸ்டைலில் தர்ணா
சிபிஐ நடவடிக்கைக்கு எதிராக மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அதே ஸ்டைலில் தற்போது, புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக முதல்வர் நாராயணசாமி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். போராட்டக் களமே திருவிழாக் கோலம் பூண்டுள்ளது.
கோப்புகளில் கையெழுத்து
மேள தாளங்களுடன் காங்கிரஸ் தொண்டர்கள் கிரண் பேடிக்கு எதிராக கோஷம் போட்டபடி உள்ளனர். தொண்டர்கள் பெருமளவில் அப்பகுதியில் குவிந்து வருகின்றனர். போராட்டம் நடக்கும் இடத்திற்கே அரசுக் கோப்புகளை வரவைத்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தும் நாராயணசாமி, தேவையான கோப்புகளில் கையெழுத்தும் போட்டு கலக்கிக் கொண்டிருக்கிறார். மொத்தத்தில் நாராயணசாமி போராட்டம் கலகலப்பாக போய்க் கொண்டிருக்கிறது.
கிரண்பேடி கடிதம்
ஆளுநர் கிரண்பேடியிடம் இருந்து முதல்வருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில் எனக்கு கடிதம் அனுப்பி விட்டு பதில் கிடைப்பதற்குள் போராட்டம் நடத்துவது சட்டத்திற்கு விரோதமானது என கிரண்பேடி குறிப்பிட்டுள்ளார். எனினும் உங்கள் கடிதம் குறித்து நேரிடையாக ஆலோசனை நடத்துவதற்கு வரும் 21ந்தேதி காலை 10 மணிக்கு வரும்படி முதலமைச்சர் நாராயணசாமிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
ஆளுநர், முதல்வர் இடையே போராட்டம் முடிவு இல்லாமல் போய்க்கொண்டு இருப்பதால் புதுச்சேரியில் அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது. பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் ஈடுபட்டுள்ளனர்.