கிரண்பேடிக்கு எதிரான புதுவை முதல்வர் நாராயணசாமியின் தொடர் போராட்டம் 3-வது நாளாக இன்றும் நீடிப்பு
புதுச்சேரி: புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடியை திரும்பப் பெற வலியுறுத்தி அம்மாநில முதல்வர் நாராயணசாமி 2-வது நாளாக சனிக்கிழமை இரவிலும் போராட்டத்தை தொடர்ந்தார். இன்று 3-வது நாளாக இந்த போராட்டம் தொடருகிறது.
புதுச்சேரியில் ஆளுநர் கிரண்பேடி- முதல்வர் நாராயணசாமி இடையேயான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. யூனியன் பிரதேசமாக இருந்தாலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குதான் அதிகாரம் என்பது முதல்வர் நாராயணசாமியின் நிலைப்பாடு.
ஆனாலும் ஆளுநருக்கே அதிகாரம் என்பதா புதுவை அரசின் அன்றாட செயல்பாடுகளில் தொடர்ந்து தலையிடுகிறார் கிரண்பேடி. இதற்கு எதிராக தொடர்ச்சியாக குரல் கொடுத்து வந்த முதல்வர் நாராயணசாமி 2 நாட்களாக தொடர் போராட்டத்தை நடத்தி வருகிறார்.
புதுச்சேரி: துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக விடிய விடிய முதல்வர் நாராயணசாமி போராட்டம்
வெள்ளிக்கிழமை முதல் போராட்டம்
புதுவையில் ஆளுநர் மாளிகை முன்பாக வெள்ளிக்கிழமையன்று கிரண்பேடியை திரும்பப் பெறும்வரை தொடர் போராட்டம் நடத்துவோம் என போராட்டத்தை தொடங்கினார் முதல்வர் நாராயணசாமி. இரவிலும் அங்கேயே படுத்துறங்கி போராட்டத்தை தொடர்ந்தார் நாராயணசாமி.
சனிக்கிழமை இரவிலும் போராட்டம்
சனிக்கிழமை நேற்று பகலில் 2-வது நாளாக இந்த போராட்டம் நடந்தது. நேற்று இரவும் போராட்ட களத்திலேயே படுத்துறங்கினார் முதல்வர் நாராயணசாமி. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், கிரண்பேடியை திரும்பப் பெறுங்கள் என்கிற கோரிக்கை பிரதமர் மோடியின் காதுகளை எட்டும் வரை இப்போராட்டம் நீடிக்கும் என்றார்.
இன்றும் நீடிக்கும் போராட்டம்
மேலும் தமது உயிருக்கு பயந்து கிரண்பேடி 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்துள்ளார். கிரண்பேடியே திரும்பிப் போ; நரேந்திர மோடியே கிரண்பேடியை திரும்பப் பெறு; புதுச்சேரியை காப்போம்! மீட்போம் என்கிற முழக்கம் தொடர்ந்து ஒலிக்கும். ஞாயிற்றுக்கிழமையும் எங்கள் போராட்டம் நீடிக்கும். இதில் பல்வேறு கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்பார்கள் என்று கூறினார் நாராயணசாமி.
பாதுகாப்பு தீவிரம்
இதனிடையே புதுவை ஆளுநர் மாளிகையை சுற்றி அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டு சாலைகள் சீல் வைக்கப்பட்டுள்ளன. இதனால் புதுவையில் தொடர்ச்சியான அரசியல் பதற்றம் நீடித்து வருகிறது.