ஆளுநர்- முதல்வர் இடையே நான்கரை மணி நேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு!
Recommended Video
புதுச்சேரி: புதுச்சேரியில் துணை நிலை ஆளுநர் கிரண் பேடிக்கும் முதல்வர் நாராயணசாமிக்கும் இடையே சுமார் நான்கரை மணி நேரமாக நீடித்து வந்த பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தது.
துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை கண்டித்து முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் ஆளுநர் மாளிகை வெளியே இன்று 6 வது நாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், துணைநிலை ஆளுநர் கிரண்பேடி இன்று மீண்டும் மாலை 5 மணிக்கு பேச்சுவார்த்தைக்கு முதலமைச்சருக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
இதுகுறித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நாராயணசாமி செய்தியாளர்களை சந்தித்தபோது, ஆளுநர் கிரண்பேடி மாலை பேச்சுவார்த்தைக்கு மீண்டும் அழைத்துள்ளார் என்றும், மக்கள் நல பிரச்சனைகளை கருத்தில் கொண்டு தானும் அமைச்சர்களும் ஆளுநர் அழைப்பின் பேரில் ஆளுநர் மாளிகை தர்பார் ஹாலில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் அமைச்சர்களுடன் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவித்திருந்தார்.
நேற்றைய தினம் தலைமை செயலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற வேண்டுமென நாராயணசாமி கூறியிருந்த நிலையில் கிரண்பேடி அதற்கு மறுப்பு தெரிவித்து, நான் தான் பேச்சுவார்த்தைக்கு அழைத்தேன். பேச்சுவார்த்தையில் யாரெல்லாம் இடம்பெற வேண்டுமென நான் முடிவு செய்வேன் என கூறியதால் நேற்றைக்கு பேச்சுவார்த்தை நடைபெறவில்லை.
இந்நிலையில் இன்று மீண்டும் பேச அழைத்திருந்தார். அதை ஏற்று நாராயணசாமி இன்றைய பேச்சுவார்த்தைக்கு சென்றார். சுமார் நான்கரை மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இந்த பேச்சுவார்த்தையில் புதுச்சேரி அரசின் தலைமைச் செயலாளர் அஸ்வனி குமார், அரசுத் துறை செயலாளர்கள், ஆளுநரின் சிறப்பு அதிகாரி தேவநீதி தாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.