வட மாநிலங்களில்தான் பெண்கள் பலாத்காரம் அதிகம்.. நாராயணசாமி வேதனை
புதுச்சேரி: வட மாநிலங்களில்தான் பெண்களுக்கு சுதந்திரம் இல்லை. அங்குதான் அதிக அளவில் பலாத்காரங்கள் நடக்கின்றன என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.
புதுச்சேரி அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை சார்பில் பெண் குழந்தைகளை பாதுகாத்தல் மற்றும் பெண் குழந்தைகளுக்கு கல்வி அளித்தல் தொடர்பான ஒருநாள் பயிற்சி முகாம் சாரம் பகுதியில் உள்ள திட்டம் மற்றும் ஆராய்ச்சித்துறை அலுவலக கருத்தருங்க கூடத்தில் நடைபெற்றது.
இந்த பயிற்சி முகாமை முதலமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்து பேசியதாவது : பெண் குழந்தைகள் அனைத்து துறைகளிலும் சாதனை செய்வதை பார்க்கிறோம். சமூகத்தில் பெண் குழந்தைகளுக்கு வாய்ப்பளித்தால் அவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்துகின்றனர்.
ஆண்களை விட பெண்கள் அதிகம்
புதுச்சேரி மாநிலத்தை பொறுத்தவரை ஆயிரம் ஆண் வாக்காளர்களுக்கு ஆயிரத்து 50 பெண் வாக்காளர்கள் உள்ளனர். ஒட்டுமொத்தமாக ஆண்களை விட 20 ஆயிரம் பெண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர். இதன்மூலமே புதுச்சேரியில் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு கிடைக்கிறது என்பது உறுதியாகியுள்ளது.
வடக்கில் பாதுகாப்பு இல்லை
வட மாநிலங்களில் பெண்களுக்கு பாதுகாப்பையும், சுதந்திரத்தையும் பார்க்க முடியாது. குறிப்பாக ராஜஸ்தான் மாநிலத்தில் பெண் சிசுக்கொலை நடக்கிறது. குழந்தை திருமணம் நடைமுறையில் உள்ளது.
பெண்களுக்கு சுதந்திரம் இல்லை
வட மாநிலங்களில் பெண்களுக்கு தனி சுதந்திரம் இல்லாத நிலை உள்ளதாகவும், வடமாநிலங்களில் பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலையும், பெண் பிள்ளைகள் அதிகமாக கற்பழிக்கப்படும் நிலையும் உள்ளது.
புதுச்சேரி சிறப்பு
சுதந்திர இந்தியாவில் இப்படியொரு நிலை மாற்றப்பட வேண்டும். புதுச்சேரி மாநிலத்தில் பெண்களுக்கு அதிகளவு பாதுகாப்பு உள்ளது. பெண்கள் சுதந்திரமாக நடைபெறும் நிலை புதுச்சேரியில் உள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் 85 சதவீத பெண்கள் கல்வியறிவு பெற்றுள்ளதாக தெரிவித்தார் நாராயணசாமி.