புதுவை காமராஜ்நகர் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளராக ஜான்குமார் தேர்வு
புதுவை: புதுவை காமராஜ் நகர் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளராக ஜான்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
புதுவை யூனியன் பிரதேசத்தில் உள்ள காமராஜ் நகர் தொகுதிக்கு எம்எல்ஏவாக முன்னாள் முதல்வர் வைத்திலிங்கம் கடந்த 2016-இல் தேர்வு செய்யப்பட்டார்.
புதுவையில் காங்கிரஸ் ஆட்சியை தொடர்ந்து புதுவை சட்டசபையின் சபாநாயகராகவும் வைத்திலிங்கம் இருந்து வந்தார். இந்த நிலையில் அவர் புதுவை சார்பில் எம்பிக்களுக்கான தேர்தலில் காங்கிரஸ் சார்பில் தேர்தல் வைத்திலிங்கம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
இதையடுத்து அவர் அந்த தேர்தலில் வெற்றி பெற்று புதுவை எம்பியாகிவிட்டார். இதனால் காமராஜ்நகர் தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.
அரசியல் இருந்து ஓய்வு பெறுகிறாரா வசுந்தரா ராஜே...?
இதனால் அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து வரும் அக்டோபர் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கடந்த முறையை போல் இந்த முறையும் கூட்டணி கட்சியான காங்கிரஸுக்கே வாய்ப்பு வழங்கியது திமுக தலைமை.
இதையடுத்து புதுவை காமராஜ் நகர் தொகுதியில் போட்டியிட முதல்வர் நாராயணசாமியின் பரிந்துரையின்படி ஜான்குமாரும், அமைச்சர் நமச்சிவாயத்தின் பரிந்துரையின்படி ஜெயகுமாரும் விருப்பமனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்கள் காங்கிரஸ் தலைமைக்கு அனுப்பப்பட்டது. இதனிடையே டெல்லிக்கு சென்ற முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, வைத்திலிங்கம் எம்பி ஆகியோர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக், செயலாளர் சஞ்சய் தத் ஆகியோரை சந்தித்து பேசினார்.
அப்போது காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தல் காங்கிரஸ் வேட்பாளர் குறித்த ஆலோசனையும் நடைபெற்றதாக சொல்லப்பட்டது. இந்த நிலையில் அந்த தொகுதியின் வேட்பாளராக முதல்வர் பரிந்துரைத்த ஜான்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.