அதிமுகவினரை மிரட்டி கூட்டணி வைத்திருக்கும் பாஜக… காங்கிரஸ் திடுக் குற்றச்சாட்டு
புதுச்சேரி:தமிழகத்தில் அதிமுகவினரை மிரட்டியே பாஜக கூட்டணி வைத்துள்ளது என்று அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் சஞ்சய் தத் குற்றம் சாட்டியுள்ளார்.
லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் திமுக, காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிடுவது என்று அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டது. காங்கிரசில் தமிழகத்தில் 9 தொகுதிகளும், புதுச்சேரியில் ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதனிடையே, லோக்சபா தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக காங்கிரஸ் கட்சியின் பிரசார குழுக் கூட்டம் புதுச்சேரியில் நடைபெற்றது. ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அதிமுக மீது பாமக விமர்சனம்
கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களுக்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் சஞ்சய் தத் பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:தமிழகத்தில் பாட்டாளி மக்கள் கட்சி கடந்த காலங்களில் அதிமுகவை கடுமையாக விமர்சித்து வந்தது.
கொள்கை கூட்டணி கிடையாது
ஆனால், தற்போது லோக்சபா தேர்தலை முன்னிட்டு கூட்டணி வைத்துள்ளது. இது கொள்கைக்கான கூட்டணி அல்ல. மத்தியில் பாஜக தலைமையிலான அரசு சிபிஐ உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகளை கைப்பாவையாக வைத்துள்ளது.
மிரட்டியே தான் கூட்டணி
அதை கொண்டே தமிழகத்தில் அதிமுக அரசு செய்த ஊழல்களை பொதுவெளியில் தெரிவித்துவிடுவோம் என்று மிரட்டியே அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளது. ஆனால் காங்கிரஸ்,திமுக கூட்டணி என்பது மக்கள் நலனுக்காகவும், கொள்கைக்காகவும் அமைக்கப்பட்ட கூட்டணி.
சந்திக்க மறுக்கும் மோடி
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர்களை பிரதமர் மோடி சந்திக்க மறுக்கிறார். ஆனால் திரைத்துறை மற்றும் நட்சத்திரங்களின் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறார் என்று தெரிவித்தார்.