தென்னகத்தில் காங்கிரஸ் ஆட்சி எஞ்சியிருப்பது புதுவையில் மட்டுமே!
சென்னை: புதுச்சேரியை தவிர்த்து தென்னிந்தியாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்து வருவது அக்கட்சி தொண்டர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
பாரம்பரிய கட்சியான காங்கிரஸ் கட்சி தமிழகம் உள்பட பெரும்பாலான மாநிலங்களில் ஆட்சியில் இருந்து வந்தது. தமிழகத்தில் ஒரு காலத்தில் காங்கிரஸ் ஆட்சி இருந்த போதிலும் தற்போது திராவிடக் கட்சிகளே மாறிமாறி ஆட்சியை பிடித்து வருகின்றன.
வடமாநிலங்களில் அப்படியில்லை. பெரும்பாலான மாநிலங்களில் காங்கிரஸ் அரசு இருந்தது. இந்த நிலையில் மத்தியில் பாஜக 2014-ஆம் ஆண்டு பொறுப்பேற்றவுடன் பெரும்பாலான மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது.
அடுத்த வாரத்தில் இருந்து.. அத்தி வரதர் நின்ற கோலத்தில் காட்சி அளிப்பார்.. முதல்வர் பழனிசாமி பேட்டி
கட்சிகள் ஆட்சி
காங்கிரஸ் கட்சி சத்தீஸ்கர், ஹிமாச்சல் பிரதேசம், மத்திய பிரதேசம், புதுச்சேரி, பஞ்சாப், ராஜஸ்தான், கர்நாடகம் (கூட்டணி) ஆகிய 6 மாநிலங்களிலும் ஒரு யூனியன் பிரதேசத்திலும் ஆட்சியில் இருந்தது. மற்ற இடங்களிலும் பாஜக ஆட்சி, மாநில கட்சிகளின் ஆட்சியே நடைபெறுகிறது.
புகைந்து
இந்த நிலையில் கர்நாடகத்தில் காங்கிரஸ் நேரடியாக ஆட்சியில் இல்லாவிட்டாலும் மஜதவுடன் கூட்டணி ஆட்சியில் இருந்தது. இந்த நிலையில் அதிகாரப் போட்டி, அமைச்சர் பதவி ஆகிய பிரச்சினைகள் உள்ளுக்குள்ளேயே புகைந்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியே வந்தது.
சபாநாயகர்
சும்மா வரவில்லை, விஸ்வரூபம் எடுத்தது. காங்கிரஸ்- மஜத கூட்டணியை சேர்ந்த 15 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தனர். இதை சபாநாயகர் ஏற்கவில்லை. எனினும் உச்சநீதிமன்றம் சென்றனர். அங்கும் சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது என சொல்லிவிட்டது.
உத்தரவு
இதையடுத்து கடந்த வியாழக்கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான தீர்மானத்தை முதல்வர் குமாரசாமி கொண்டு வந்தார். இந்த நிலையில் 3 நாட்கள் விவாதம் நடந்து வந்தது. நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கூடாது என காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்தது. எனினும் சபாநாயகர் உத்தரவிட்டதால் நேற்றைய தினம் இரவு நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது.
குமாரசாமி ஆட்சி
மொத்தம் 224 எம்.எல்.ஏக்களை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு பெரும்பான்மைக்கு 113 எம்எல்ஏக்கள் தேவை. ஆனால் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு ஆதரவாக 99 உறுப்பினர்களும், எதிர்த்து 105 பேரும் வாக்களித்தனர். இதையடுத்து குமாரசாமி ஆட்சி கவிழ்ந்தது.
காங்கிரஸ்
இதனால் காங்கிரஸ் ஆட்சியானது சத்தீஸ்கர், ஹிமாச்சல் பிரதேசம், மத்திய பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய 5 மாநிலங்களாக சுருங்கியது. தென்னிந்தியாவை எடுத்து கொண்டோமேயானால் கூட்டணி ஆட்சியாக இருந்தாலும் கர்நாடகத்தில் காங்கிரஸும் ஆட்சியில் இருந்தது.
புத்துயிர்
ஆனால் தற்போது எஞ்சியிருப்பது புதுவை யூனியன் மட்டுமே. ஒரு பாரம்பரியமான கட்சி வெறும் 5 மாநிலங்களிலும் ஒரு யூனியன் பிரதேசத்திலும் ஆட்சியில் இருப்பதை எண்ணி தொண்டர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். அதிலும் தென்னிந்தியாவில் சுத்தமாக வாஷ் அவுட் ஆகியுள்ளதால் தென்னிந்திய தலைவர்கள் விரக்தியில் உள்ளனர். புதிதாக காங்கிரஸுக்கு தேர்வு செய்யும் தலைவராவது அழியும் விளிம்பில் உள்ள அக்கட்சிக்கு புத்துயிர் கொடுப்பாரா என்பதை பார்ப்போம்.