முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள் ஊழல்.. ஆளும் காங். எம்எல்ஏ பேட்டி.. பரபரப்பில் புதுச்சேரி
புதுச்சேரி: புதுச்சேரி மாநில முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் செய்த ஊழல்கள் தொடர்பான பட்டியலை காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா மற்றும் ராகுல் காந்தியிடம் அளிக்க உள்ளதாக ஆளும் காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர் தனவேலு தெரிவித்துள்ள சம்பவம் புதுச்சேரி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரி மாநிலம் பாகூர் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் தனவேலு. சட்டமன்ற உறுப்பினர் தனவேலுவுக்கு அரசு சார்பில் பாப்ஸ்கோ எனும் வாரியத் தலைவர் பதவி அளிக்கப்பட்டது. இதனிடையே பாகூர் தொகுதிக்குட்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் உயிர் காக்கும் மருந்துகள் மற்றும் ஆம்புலன்ஸ் வசதி இல்லை எனக்கூறி, இரண்டு தினங்களுக்கு முன்பு 500 க்கும் மேற்பட்ட பொதுமக்களுடன் சேர்ந்து ஆளும் அரசுக்கு எதிராக ஆரம்ப சுகாதாரத்துறை நிலையத்தை முற்றுகையிட்டு தனவேலு போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதனைத்தொடர்ந்து நேற்றைய தினம் ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினர் தனவேலுவின் போராட்டம் குறித்து விளக்கம் அளித்த முதல்வர் நாராயணசாமி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ், பாகூர் தொகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் அடுத்த 3 மாதங்களுக்கு தேவையான உயிர் காக்கும் மருந்துகள் மற்றும் ஆம்புலன்ஸ் வசதிகள் உள்ளதாகவும், வேண்டுமென்றே இதுபோன்ற பொய்யான குற்றச்சாட்டுகளை தெரிவித்த சட்டமன்ற உறுப்பினர் தனவேலு மீது நடவடிக்கை எடுக்க கட்சி தலைமையிடம் புகார் அளித்துள்ளதாக தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில் முதலமைச்சர் மற்றும் அமைச்சருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சட்டமன்ற வளாகத்தில் உள்ள கமிட்டி அறையில் செய்தியாளர்களை சந்தித்த, காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர் தனவேலு, அமைச்சர் செய்த ஊழல்கள் குறித்த ஒரு சில ஆதாரத்துடன் தெரிவித்தார். மேலும் காங்கிரஸ் கட்சி மூலமாக கடந்த 3 ஆண்டுகளாக பல்வேறு அச்சுறுத்தல்கள் தனக்கு இருந்து வந்ததாகவும், முதலமைச்சர் நாராயணசாமியின் தவறான போக்கின் காரணமாக அமைச்சர்கள் அதிகப்படியான ஊழல்களை செய்து வருகின்றனர் என குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், ஊழல்கள் காரணமாக பல்வேறு அரசு துறைகள் அழிந்து வருவதாகவும். தன் மீது முதல்வர் மற்றும் அமைச்சர் தவறான தகவல்களை தெரிவித்துள்ளனர் என்றார். புதுச்சேரி அரசுக்கு தன்னுடைய சொந்த அறக்கட்டளை மூலம் ரூபாய் 25 லட்சம் மதிப்பிலான மருந்துகளை வழங்கி உள்ளதாகவும், தவறான தகவல்களை தெரிவிக்கும் சுகாதாரத்துறை அமைச்சர் என்னுடன் நேருக்கு நேர் விவாதிக்க தாயாரா எனவும் கேள்வி எழுப்பினார். இதேபோல் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் செய்த ஊழல் பட்டியல்களை ஆதாரத்துடன் கட்சியின் தலைவர் சோனியாகாந்தி மற்றும் ராகுலிடம் புகார் அளிக்க உள்ளதாகவும், புதுச்சேரி முதலமைச்சர் தன்னுடைய பதவியை தொடர்ந்தால் வரும் 2021 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய வீழ்ச்சியை சந்திக்கும் என்றும், என் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் அனைத்தும் பொய்யானது எனவும் ஆவேசமாக தெரிவித்தார்.
50 வாரங்கள்தான்.. உங்கள் சக்தியை காட்டுவதற்கான நேரம் வருகிறது.. மதுரையில் கமல்ஹாசன் அதிரடி பேச்சு
ஆளும் காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினரே முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு புகார் தெரிவித்து இருப்பது புதுச்சேரி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.