நாராயணசாமி மீது 100 கோடி ரூபாய் ஊழல் புகார்.. ஆதாரத்தை கிரண்பேடியிடம் ஒப்படைத்த காங். எம்எல்ஏ!
புதுச்சேரி: புதுச்சேரி முதலமைச்சர், சபாநாயகர் மற்றும் அமைச்சர்கள் மீது காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் தனவேலு ஆளுநர் கிரண்பேடியை சந்தித்து 100 கோடி ரூபாய் நிலபேர ஊழல் புகார் பட்டியல் அளித்துள்ள சம்பவம் புதுச்சேரி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகூர் தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் தனவேலு. அக்கட்சியில் தொடர்ந்து அதிருப்தியில் இருந்து வந்தார். இந்நிலையில் ஆளும் அரசு மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி, இரு வாரங்களுக்கு முன்பு பாகூரில் போராட்டத்தில் ஈடுபட்டார்.
அப்போது முதலமைச்சர் பதவி விலக வேண்டும் என வெளிப்படையாக கூறியது காங்கிரசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் கடந்த 10 தினங்களுக்கு முன்பு ஆளுநர் கிரண்பேடியை சந்தித்து, முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் மீது ஊழல் புகார் அளித்தார். இந்த விவகாரம் புதுச்சேரி அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதனையடுத்து காங்கிரஸ் அரசு மீதும், முதலமைச்சர் நாராயணசாமி மீதும் ஊழல் புகார் கூறிய தனவேலு எம்.எல்.ஏவை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்து அக்கட்சியின் தலைவர் நமச்சிவாயம் உத்தரவிட்டார். மேலும் ஆட்சியைப்பற்றி விமர்சனம் செய்த தனவேலுவிடம் விளக்கம் கேட்டு நோட்டீசும் அனுப்பப்பட்டது.
இந்நிலையில் புதுச்சேரி அரசின் பல்வேறு முறைகேடுகளை கண்டித்தும், முதல்வர் நாராயணசாமி பதவி விலகவேண்டும் என்பதை வலியுறுத்தியும் இன்று காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏ தனவேலு தலைமையில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் மற்றும் பாகூர் பொதுமக்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சுதேசி மில்லில் இருந்து நீதி கேட்டு ஊர்வலமாக ஆளுநர் மாளிகை அருகே வந்தனர். அப்போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள் இதனையடுத்து தனவேலு எம்.எல்.ஏ உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் ஆளுநர் மாளிகைக்குள் அனுமதிக்கப்பட்டார்கள்.
ஆளுநரை சந்தித்தது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தனவேலு, சபாநாயகர் சிவகொழுந்து, முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் முதலமைச்சரின் மகன், அவருடைய சம்மந்தி உள்ளிட்ட மூன்று அமைச்சர்கள் மீது நில மோசடி தொடர்பாக 100 கோடி ரூபாய்க்கான ஊழல் குறித்து ஆதாரத்துடன் ஊழல் பட்டியலை ஆளுநரிடம் கொடுத்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளேன்.
இந்த ஊழல் பட்டியலை அரசு அதிகாரிகள் உதவியுடன் தயாரித்தேன். மேலும் பல்வேறு தகவல்களை சேகரித்து வருகிறேன். மேலும் இந்த ஊழல் புகார் பட்டியலை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, சிபிஐ மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியை சந்தித்து அளிக்க உள்ளதாக தெரிவித்தார். ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக அதே கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் தனவேலுவின் எதிர்ப்பு வலுத்து வருவது புதுச்சேரி அரசியலில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.