நாராயணசாமி மீது சிபிஐயில் புகார் கொடுங்க.. விடாதீங்க.. புகாருடன் வந்த தனவேலு.. கிரண் பேடி ஹேப்பி!
புதுச்சேரி: புதுச்சேரி அரசு மற்றும் முதல்வர் மீது போர் கொடி தூக்கியுள்ள காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏ தனவேல், திடீரென ஆளுநர் கிரண்பேடியை சந்தித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
முதல்வர் மீதும் அவரது மகன் மீதும் தனவேலு எம்எல்ஏ நில அபகரிப்பு ஊழல் புகார் கொடுத்துள்ளதாக தனவேலு சந்திப்பு குறித்து ஆளுநர் கிரண்பேடி விளக்கம் அளித்துள்ளார்.
புதுச்சேரி மாநிலம் பாகூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ தனவேலு. இவர் பல மாதங்களாக ஆட்சியின் மீது அதிருப்தியில் இருந்தார். இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு, தனது தொகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்து மாத்திரைகள் இல்லை எனக்கூறி பொதுமக்களுடன் சேர்ந்து அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டார்.
போராட்டத்தில் ஈடுபட்டது மட்டுமல்லாமல் காங்கிரஸ் அரசு மீதும் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மீதும் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.
மேலும் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் ஊழல் குறித்து கட்சியின் தலைவர் சோனியாகாந்தி மற்றும் ராகுல் காந்தியை சந்தித்து ஆதாரத்துடன் புகார் அளிக்க உள்ளதாகவும் தனவேலு வெளிப்படையாக பேசியிருந்தார். தனவேலுவின் இத்தகைய நடவடிக்கையால், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் தனவேலு மீது உச்சகட்ட கோபத்தில் இருக்கின்றனர்.
இதனிடையே அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் தனவேலு மீது நடவடிக்கை எடுக்க கட்சி தலைமையிடம் புகார் தெரிவித்து உள்ளதாக முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார். மேலும் வேண்டுமென்றே இதுபோன்ற பொய்யான குற்றச்சாட்டுகளை தனவேலு தெரிவிப்பதாகவும் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.
இதனால் ஆளும் கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் தனவேலுவுக்கும், முதலமைச்சருக்குமிடையே நேரடியாக மோதல் உருவானது. இந்நிலையில் நேற்று தனவேலு திடீரென ராஜ்நிவாஸில், துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தார்.
அதில், அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியதால் தனது தொகுதிக்கு எந்த ஒரு நலத்திட்டங்களையும் செய்யக்கூடாது என முதலமைச்சர் நாராயணசாமி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளாதாகவும், அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்து இருந்தார்.
சுமார் 20 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பிற்கு பின்னர் ராஜ்நிவாசிலிருந்து வெளியே வந்து செய்தியாளர்களிடம் பேசிய தனவேலு,
பாகூர் தொகுதிக்குட்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் உயிர் காக்கும் மருந்துகள் இல்லை என போராட்டம் நடத்தியதன் காரணமாக, தனக்கு எதிராக முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் உள்ளதாகவும், பாகூர் தொகுதிக்கு எந்த ஒரு நலத்திட்டங்களையும் செயல்படுத்த கூடாது என அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் வாய்மொழி உத்தரவு போட்டுள்ளதாக தெரிவித்தனர்.
இது தொடர்பாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை சந்தித்து புகார் அளித்துள்ளேன். மேலும் மக்கள் நலத்திட்டங்கள் தடைபடாமல் தொடர்ந்து செயல்படுத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உத்திரவாதத்தை தன்னிடம் கிரண்பேடி அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் செய்த ஊழல்களை வெளிகொண்டுவந்து , தண்டனை வாங்கி தரும் வகையில் தன்னுடைய செயல்பாடுகள் இருக்கும் என கிரண்பேடியிடம் தெரிவித்ததாகவும், இதற்கு கிரண்பேடி ஆதரவு அளித்ததாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், பொங்கல் பண்டிகைக்கு பிறகு முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மீது ஊழல் புகார்கள் குறித்து, கட்சியின் தலைவர் சோனியா மற்றும் ராகுலிடம் புகார் அளிக்க உள்ளதாகவும், ஆளும் கட்சியை சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் தனக்கு ஆதரவாக இருப்பதாகவும், அவர்கள் வெளிவரும்போது அதிர்ச்சியான நிலையை ஆளும் காங்கிரஸ் அரசு சந்திக்கும் என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர், ஆட்சி மாற்றம் செய்ய வேண்டும் என்பது தனது கோரிக்கை இல்லை என்றும், ஊழல் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இனிவரும் காலங்களில் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஊழல் செய்ய பயப்பட வேண்டும் என்றார்.
இந்த நிலையில் தனவேலு எம்.எல்.ஏ தன்னை சந்தித்த விவகாரம் குறித்து சமூக வலைதளத்தில் தகவல் தெரிவித்துள்ள துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, புதுச்சேரியில் நிலபேர ஊழலில் முதல்வர் மற்றும் அவரது மகன் ஈடுபட்டுள்ளதாக தனவேலு புகார் தெரிவித்தார். இதுகுறித்து புதுச்சேரியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் புகார் அளிக்க அவருக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும், மேலும் முதலமைச்சரின் ஊழல் தொடர்பான அனைத்து தகவல்களையும் சேகரித்துவிட்டு,, பொங்கல் பண்டிகை கழித்து வருவதாக தனவேலு கூறியதாக ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கும் முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட அமைச்சரவைக்குமிடையே ஆரம்ப முதலே அதிகாரப்போர் நடைபெற்று வரும் நிலையில், ஆளும் கட்சி எம்.எல்.ஏ கொடுத்த புகாரை கிரண்பேடி சிபிஐயிடம் கொடுக்க சொல்லியுள்ள சம்பவம், பொங்கல் பண்டிகை முடிந்த பின்பு, புதுச்சேரி மாநில அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது.