ஊழல் செஞ்சுட்டாரு நாராயணசாமி.. அது போன வாரம்.. இல்லை இல்லை.. அது இந்த வாரம்.. தனவேலு டகால்டி!!
புதுச்சேரி: காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏ தனவேலுவை தகுதி நீக்கம் செய்வது தொடர்பாக சபாநாயகர் சிவகொழுந்து அனுப்பிய விளக்க நோட்டீசுக்கு, பதில் அளிக்க மேலும் இரண்டு வாரம் கால அவகாசம் கேட்டு சபாநாயகரிடம் கடிதம் அளித்தார் எம்எல்ஏ தனவேலு.
மேலும் தான் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியில் இருப்பதாகவும், அரசுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் தனவேலு தெரிவித்துள்ளார். புதுச்சேரி பாகூர் தொகுதியை சேர்ந்தவர் ஆளும் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ தனவேலு. இவர் கடந்த சில மாதங்களாகவே கட்சியில் அதிருப்தியில் இருந்துவந்தார்.
இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் மீது 100 கோடி ரூபாய் அளவிற்கு நிலமோசடி ஊழல் புகார் கூறினார். மேலும் ஆளுநர் கிரண்பேடியை சந்தித்து முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் ஊழல் புகார் பட்டியலை கொடுத்தார். இந்த விவகாரம் புதுச்சேரி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழக பட்ஜெட்டில் அரசு ஊழியர்களின் சம்பளத்துக்காக ரூ. 64,208.55 கோடி ஒதுக்கீடு
சபாநாயகருடன் ஆலோசனை
இந்நிலையில் கடந்த 30 ஆம் தேதி அரசு கொறடா அனந்தராமன், காங்கிரஸ் கட்சித் தலைவர் நமச்சிவாயம் உள்ளிட்ட காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் சபாநாயகர் சிவக்கொழுந்துவை சந்தித்து சட்டமன்ற உறுப்பினர் தனவேலு தகுதி நீக்கம் செய்யகோரி மனு அளித்தனர். இந்த மனுவை பெற்றுகொண்ட சபாநாயகர் சிவக்கொழுந்து, இது தொடர்பாக சட்டபேரவை செயலாளர் வின்சென்ட்ராயருடன் ஆலோசனை நடத்தினார்.
பதவிக்கு சிக்கல்
இதனை தொடர்ந்து அரசு கொறடா அனந்தராமன் கொடுத்த மனு தொடர்பாக, ஒரு வாரத்தில் பதில் அளிக்ககோரி தனவேலு எம்எல்ஏவுக்கு சபாநாயகர் சிவக்கொழுந்து நோட்டீஸ் அனுப்பினார். இந்நிலையில் இந்த நோட்டீசை பெற்று கொண்ட சட்டமன்ற உறுப்பினர் தனவேலு, தனது வழக்கறிஞர்களுடன் இன்று சபாநாயகர் சிவக்கொழுந்துவை சந்தித்து கடிதம் ஒன்றை அளித்தார்.
2 வாரம் அவகாசம் தேவை
கடிதம் அளித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த தனவேலு, தொகுதியில் மக்கள் பணிகள் அதிகம் இருப்பதால், என்னை தகுதி நீக்கம் செய்வது தொடர்பாக சபாநாயகர் அனுப்பிய விளக்க நோட்டீசுக்கு பதில் அளிக்க இரண்டு வார காலம் அவகாசம் கேட்டு கடிதம் அளித்துள்ளேன். கடிதத்தை பெற்று கொண்ட சபாநாயகர் ஆலோசனை செய்து பதில் அளிப்பதாக கூறியுள்ளதாக தெரிவித்தார்.
அரசுக்கே ஆதரவு
தொடர்ந்து பேசிய அவர், நடந்து முடிந்த சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில் பங்கேற்று, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக அரசு கொண்டு வரும் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டுமென அரசு கொறடா அனந்தராமன் தனக்கு கடிதம் அனுப்பினார். அதனடிப்படையில் சட்டமன்ற கூட்டத்தில் கலந்துகொண்டு, அரசின் தீர்மானத்திற்கு ஆதரவாக செயல்பட்டேன். நான் ஒருபோதும் அரசுக்கு எதிரானவன் அல்ல.
திடீர் பல்டி
காங்கிரஸ் கட்சியால் தேர்ந்தெடுக்கப்பட்ட நான் காங்கிரஸ் அரசுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்குவேன் என்றார். கடந்த நான்கு ஆண்டுகளாக புதுச்சேரியில் ஆட்சி சரியில்லை என்றும், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் ஊழல் செய்வதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். முதலமைச்சர் பதவி நீக்கம் செய்யாவிட்டால், அரசுக்கு அளித்து வரும் ஆதரவை திரும்பப்பெறுவேன் என தொடர்ச்சியாக கூறிவந்த தனவேலு, தற்போது திடீரென்று தான் எப்போதும் அரசுக்கு ஆதரவாக செயல்படுவேன் என கூறியுள்ளது புதுச்சேரி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.