கொல்லைப்புற முதல்வரே.. நாராயணசாமிக்கு எதிராக காங். எம்எல்ஏ திடீர் போர்க்கொடி!
புதுச்சேரி: ஆட்சி நடத்த தகுதியில்லாத முதலமைச்சர் நாராயணசாமி பதவி விலக வேண்டுமென ஆளும் காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர் தனவேலு கோரிக்கை விடுத்துள்ள சம்பவம் புதுச்சேரி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கும், முதலமைச்சர் நாராயணசாமிக்கும் இடையே நீடிக்கும் அதிகார மோதலால், புதுச்சேரியில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
மேலும் கடுமையான நிதிப்பற்றாக்குறையால், அரசு மருத்துவமனைகளில் போதிய மருந்துகள் இருப்பு இல்லை. இலவச அரிசி வழங்கப்படவில்லை. முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட எந்தவொரு நலத்திட்டங்களையும் செயல்படுத்த முடியாத நிலை இருந்து வருகிறது.
இந்நிலையில் புதுச்சேரியை அடுத்த பாகூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உயிர்காக்கும் மருந்துகள் எதுவும் இல்லை என்று கூறியும், அவசர உதவிக்கு ஆம்புலன்சை இயக்க டீசல் கூட போட இயலாத நிலை இருப்பதாக கூறி, பாகூர் தொகுதி மக்களின் உயிருடன் விளையாடும் புதுச்சேரி அரசை கண்டித்து ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர் தனவேலு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுடன் பேரணியாக சென்று பாகூர் ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு புதுச்சேரி அரசுக்கு எதிராக கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டார்.
போராட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த தனவேலு எம்எல்ஏ, புதுச்சேரியில் அரசு நிர்வாகம் கடந்த மூன்று ஆண்டுகளாக சீர்குலைந்து விட்டது. ஆளுநர் மீது குற்றம் சுமத்தி முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்கள் தப்பிக்க பார்ப்பதால், மாநிலத்தின் வளர்ச்சி தடைபட்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் லஞ்சம் ஊழல் தலைவிரித்தாடுகிறது. இதை முதல்வரால் தடுக்க முடியாமல் அதனுடன் உடந்தையாக இருக்கிறார்.
முதலமைச்சர் நாராயணசாமிக்கு ஆளுமை தன்மை கிடையாது. ஆட்சி நடத்த முடியவில்லை என்றால் கொல்லைப்புறமாக முதலமைச்சர் பதவிக்கு வந்த நாராயணசாமி தானாக முன் வந்து தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, மற்றவர்களுக்கு வழிவிட வேண்டும். தன்னை போன்று மற்ற சட்டமன்ற உறுப்பினர்களும் ஆளும் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த தயாராக உள்ளார் என்றார். தன்னுடைய கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் அரசுக்கு அளித்து வரும் ஆதரவை திரும்ப பெற உள்ளேன் என்றார் தனவேலு.
குஜால் பேச்சு.. ஆபாச படங்கள்.. நித்தியானந்தா திறந்த வாட்ஸ் ஆப் குரூப்.. 12 சிறுமிகள் இருந்தாங்களாம்!
ஆளும் காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஒருவரே முதலமைச்சர் நாராயணசாமிக்கு ஆளுமை தன்மை இல்லை என்று கூறி, அவரை பதவி விலக கூறியிருப்பது புதுச்சேரி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.