அரசின் செயல்பாடு சரியில்லை.. கிளவுஸ், மாஸ்க்குடன் சட்டசபைக்கு வந்த காங். எம்எல்ஏ!
புதுச்சேரி: புதுச்சேரி அரசு கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை போதிய அளவில் மேற்கொள்ளவில்லை என குற்றம்சாட்டி, இதனை அரசுக்கு உணர்த்தும் வகையில், ஆளும் காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர் தனவேலு கையுறை மற்றும் முக கவசத்துடன் சட்டமன்றத்திற்கு வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி பாகூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ தனவேலு. கட்சியில் அதிருப்தியுடன் செயல்பட்டு வந்த அவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி, ஊழல் குறித்து ஆளுநர் கிரண்பேடியை சந்தித்து புகார் பட்டியலை கொடுத்தார். இந்த விவகாரம் புதுச்சேரி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் அரசு கொறடா அனந்தராமன், அமைச்சர் நமச்சிவாயம், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள், சபாநாயகர் சிவக்கொழுந்துவை சந்தித்து ஆட்சிக்கு எதிராக செயல்பட்ட தனவேலு எம்எல்ஏவை தகுதி நீக்கம் செய்யகோரி மனு அளித்தார்கள்.
இந்த மனுவை பெற்று கொண்ட சபாநாயகர் சிவக்கொழுந்து, அரசு கொறடா அனந்தராமன் கொடுத்த மனு தொடர்பாக, பதில் அளிக்குமாறு தனவேலு எம்எல்ஏவுக்கு நோட்டீஸ் அனுப்பினார். ஆனால் தன் மீதான புகாருக்கு விளக்கம் அளிக்க தொடர்ச்சியாக கால அவகாசம் கேட்டு வந்த தனவேலு, சபாநாயகர் அனுப்பிய நோட்டிசிக்கு இன்று விளக்கம் அளிக்க உள்ளதாக தெரிவித்திருந்தார்.
அதன்படி சட்டமன்ற உறுப்பினர் தனவேலு இன்று சபாநாயகர் சிவக்கொழுந்துவை சந்தித்து மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், கொரோனா வைரஸ் எதிரொலியாக தனது வழக்கறிஞர்கள் சென்னையில் இருந்து வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், சாட்சிகளிடம் விசாரணை நடத்த வேறு ஒரு தேதியை ஒதுக்கும்படி கேட்டிருந்தார். மனுவை பெற்றுக்கொண்ட சபாநாயகர் இதுகுறித்து பின்னர் கூறுவதாக தெரிவித்துவிட்டார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சட்டமன்ற உறுப்பினர் தனவேலு, கொரோனா வைரஸ் எதிரொலியாக தனது வழக்கறிஞர்கள் வரமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால், விசாரணையை வேறு தேதிக்கு ஒத்திவைக்கும் படி சபாநாயகரிடம் மனு அளித்துள்ளதாகவும், கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அரசு போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என குற்றம்சாட்டினார்.
மேலும் கொரோனா விவகாரத்தில் அரசு செயலிழந்துள்ளதை, உணர்த்தும் பொருட்டு சட்டமன்றத்திற்கு கையுறை மற்றும் முக கவசம் அணிந்து வந்ததாக கூறினார்.