வந்துருச்சு தேர்தல்.. களை கட்டிய புதுச்சேரி.. முக்கிய வேட்பாளர்கள் அடுத்தடுத்து மனு தாக்கல்!
Recommended Video
புதுச்சேரி: புதுச்சேரி லோக்சபா தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம், என் ஆர் காங்கிரஸ் வேட்பாளர் கே.நாராயணசாமி ஆகியோர் இன்று அடுத்தடுத்து வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள ஒரே ஒரு மக்களவை தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 19 ஆம் தேதி தொடங்கியது. நேற்றுவரை இரண்டு சுயேட்சை வேட்பாளர்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.
பிரதான கட்சிகளாக காங்கிரஸ், என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர்களை அறிவிக்காமல் இருந்த நிலையில், நேற்று இரவு காங்கிரஸ் கட்சி சார்பில் புதுச்சேரி மக்களவை தொகுதியில் சபாநாயகர் வைத்திலிங்கம் போட்டியிட உள்ளதாக மாநில காங்கிரஸ் கமிட்டி அறிவித்தது.
கொதிக்கும் "ஏசி".. தகிக்கும் வேலூர்.. அனல் பறக்கும் போட்டியில் துரைமுருகன் மகன் கதிரானந்த்
காங்கிரஸ் வைத்தியலிங்கம்
இதனை தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்த வைத்தியலிங்கம், இன்று பிற்பகல் புதுச்சேரி மக்களவை தேர்தலில் போட்டியிடுவதற்காக தனது வேட்பு மனுவை வழுதாவூர் சாலையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரியான அருணிடம் தாக்கல் செய்தார்.
முக்கிய தலைவர்கள்
வேட்புமனு தாக்கலின்போது காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் நமச்சிவாயம் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர். மக்களவை தேர்தலில் போட்டியிடும் வைத்தியலிங்கம் இரண்டு முறை புதுச்சேரி மாநிலத்தின் முதலமைச்சராகவும், 7 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.
மாத்தி யோசிச்ச புதுச்சேரி
இதனிடையே வழக்கமாக தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கான காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைமைதான் அறிவிக்கும். அதன்பிறகு வேட்பாளர்கள் வேட்பு மனுதாக்கல் செய்வார்கள்.
தேர்ந்தெடுத்து ஒப்புதல்
இந்த முறை தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை தேர்வு செய்வதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருவதால், புதுச்சேரி மாநில காங்கிரஸார் ராகுல்காந்தியின் ஒப்புதல் பெற்று, வைத்தியலிங்கத்தை வேட்பாளராக அறிவித்து இன்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
என் ஆர் காங். வேட்பாளர்
இதேபோல் அதிமுக கூட்டணியில் உள்ள என்.ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் மறைந்த முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினரும், மருத்துவக்கல்லூரி அதிபருமான நாராயணசாமி தேர்தல் நடத்தும் அதிகாரி அருணிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அப்போது கட்சியின் நிறுவன தலைவர் ரங்கசாமி, பொதுச்செயலாளர் பாலன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளான அதிமுக மற்றும் பாமக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
நாம் தமிழர் ஷர்மிளா பேகம்
இதேபோல் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் எம்.ஏ.எஸ். சுப்ரமணியன் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவரை தொடர்ந்து நாம் தமிழர் கட்சி சார்பில் ஷர்மிளா பேகம் புதுச்சேரி மக்களவை தேர்தலில் போட்டியிடுவதற்காக தனது வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் அதிகாரியான அருணிடம் தாக்கல் செய்தார்.