புதுவை மாநில அந்தஸ்து கோரி... தேர்தலை புறக்கணிக்கவும் தயார்... சுனில் அரோராவிடம் கூறிய காங்கிரஸ்!
புதுவை: புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும். இது தொடர்பாக தேர்தலை புறக்கணிக்க தயாராக உள்ளோம் என்று ஆளும் காங்கிரஸ் கட்சியினர் இந்திய தலைமைத்தேர்தல் ஆணையர் சுனில் அரோராவிடம் தெரிவித்தனர்.
தமிழகத்துடன் சேர்த்து புதுவைக்கு தேர்தல் நடத்த வேண்டும் என்று அனைத்து கட்சிகளும் தலைமைத்தேர்தல் ஆணையரிடம் கேட்டுக் கொண்டன.
புதுவை தேர்தலுக்கு டெல்லி போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்று பா.ஜ.க. சார்பில் வலியுறுத்தப்பட்டது.
சுனில் அரோரா தமிழகம் பயணம்
தமிழக சட்டசபையின் பதவிக்காலம் மே மாதம் முடிவடைகிறது. அதனால் அதற்குள் தேர்தல் நடத்த வேண்டும். இதனால் சட்டசபை தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை தொடங்கி இருக்கிறது. தமிழகத்தில் தேர்தல் நடத்துவதுதற்கான ஆயத்த பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக இந்திய தலைமைத்தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையில், ஆணையர்கள் மற்றும் அதிகாரிகள் சென்னைக்கு நேற்று காலையில் வந்தனர்.
80 வயதுள்ளவர்களுக்கு தபால் வாக்கு மாற்றமில்லை
நேற்று தமிழக அனைத்து கட்சிகளுடன் ஆலோசனை நடத்தினர். அப்போது தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என கட்சிகள் கோரிக்கை விடுத்தனர். மேலும், மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகளுடனும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார்கள். இன்று நிருபர்களிடம் பேட்டியளித்த சுனில் அரோரா, தமிழகத்தில் தேர்தல் நடைபெறும் தேதி விரைவில் ஆலோசித்து அறிவிக்கபப்டும் என்றும் 80 வயது மேற்பட்டவர்களுக்கு தபால் வாக்கு என்பதில் மாற்றமில்லை என்றும் தெரிவித்தார்.
புதுவைக்கு ஒரே கட்டமாக தேர்தல்
இந்த நிலையில் இன்று இரவு புதுச்சேரி சென்ற இந்திய தலைமைத்தேர்தல் ஆணையர் சுனில் அரோரா உள்ளிட்ட அதிகாரிகள் அங்கு தேர்தல் தொடர்பாக அனைத்து கட்சிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள். ஆளும் காங்கிரஸ், என்.ஆர்.காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகளுடன் ஆலோசனை மேற்கொண்டனர். அப்போது தமிழகத்துடன் சேர்த்து புதுவைக்கு தேர்தல் நடத்த வேண்டும் என்று அனைத்து கட்சிகளும் தலைமைத்தேர்தல் ஆணையரிடம் கேட்டுக் கொண்டன.
தேர்தல் புறக்கணிக்க தயார்
அப்போது புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும். இது தொடர்பாக தேர்தலை புறக்கணிக்க தயாராக உள்ளோம் என்று ஆளும் காங்கிரஸ் கட்சியினர் புகார் தெரிவித்தனர். மேலும், நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கக்கூடாது என்றும் காங்கிரஸ் கோரிக்கை விடுத்தது. புதுவை தேர்தலுக்கு டெல்லி போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்று பா.ஜ.க. சார்பில் வலியுறுத்தப்பட்டது.
பாம்பும், கீரியுமாக கிரண்பெடி-நாராயணசாமி
புதுவையில் ஆளும் காங்கிரசுக்கும், துணை நிலை ஆளுநர் கிரண்பெடியும் பாம்பும், கீரியுமாக இருந்து வருகின்றனர். அரசு அறிவிக்கும் திட்டங்களை ஆளுநர் ரத்து செய்வதும், ஆளுநர் அறிவிப்புக்கு அரசு எதிர்ப்பு தெரிவிபப்தும் தொடர்ந்து வருகிறது. ஆளுநர் கிரண்பெடிக்கு எதிராக முதல்வர் நாராயணசாமி ஏற்கனவே விடிய, விடிய உண்ணாவிரதம் இருந்தார். மேலும், அவர் கிரண்பெடியை மாற்றக்கோரி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை நேரில் சந்தித்து மனு கொடுத்தது குறிப்பிடத்தக்கது.