புதுச்சேரியில் 14 வயது சிறுமி உட்பட 7 பேருக்கு புதியதாக கொரோனா- மேலும் ஒரு முதியவர் உயிரிழப்பு
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் புதிதாக 14 வயது சிறுமி உட்பட 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒரு முதியவர் உயிரிழந்துள்ளார். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் நேற்று வரை கொரோனா தொற்றால் 157 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் 88 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், 67 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், புதுச்சேரி அம்பார்த்தபுரத்தை தற்காலிக முகவரியாக தெரிவித்திருந்த விழுப்புரம் மாவட்டம் குமளம் பகுதியைச் சேர்ந்த முதியவர் மற்றும் முத்தியால்பேட்டையை சேர்ந்த முதியவர் என 2 பேர் உயிரிழந்தனர்.
வசந்தகுமாரின் கொரோனா வைரஸ் மருந்து.. 2 ரூபாய்தான்.. பரிசீலிக்க மத்திய அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு
இந்நிலையில் தற்போது புதுச்சேரியில் புதிதாக 6 பேர், காரைக்காலைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் என 7 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்த 82 வயதுடைய ஒரு முதியவர் உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், செய்தியாளர்களிடம் கூறும்போது, புதுச்சேரி மாநிலத்தில் மேலும் 7 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 4 பேர் கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியிலும், ஜிப்மரில் ஒருவரும், வெளி மாநிலத்தில் ஒருவரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதுமட்டுமின்றி காரைக்காலைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், முதலியார்பேட்டை போலீஸ் சந்து பகுதியை சேர்ந்த 82 வயது முதியவர் இருதய கோளாறு, உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தார். சில நாட்களுக்கு முன்பு அவர் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் சந்தேகத்தின் பேரில் இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லூரிக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு 2 முறை கொரோனா பரிசோதனை செய்ததில் நெகடிவ் என்று வந்தது.
இந்நிலையில் நேற்று மாலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் மீண்டும் அவருக்கு பரிசோதனை செய்தபோது கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த புதுச்சேரியை சேர்ந்த 2 வது நபர் இவர் ஆவார். இதன் மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 163 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 84 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தற்போது இந்திரா காந்தி மருத்துவ கல்லூரியில் 6 பேர், ஜிப்மரில் 4 பேர் என மொத்தம் 10 பேர் குணமடைந்து வீட்டுக்கு சென்றுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 76 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 9,250 பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 8,979 பரிசோதனை நெகடிவ் என்று வந்துள்ளது. 104 பரிசோதனைகள் முடிவுக்காக காத்திருப்பில் உள்ளது. மேலும் மண்ணாடிப்பட்டு மாரியம்மன் கோயில் தெரு, அரும்பார்த்தபுரம் டீச்சர்ஸ் காலனி, தருமாபுரி தனகோடி நகர் 4 வது குறுக்கு தெரு ஆகியவை கட்டுப்பாட்டு மண்டலத்திலிருந்து விலக்கி கொள்ளப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உள்ளவர்களை வீட்டிலேயே வைத்து சிகிச்சை அளிப்பது என்று ஆந்திர மாநில அரசு ஒரு அரசாணை வெளியிட்டுள்ளது.
இவ்வாறு சிகிச்சை பெறுவோரை நடமாடும் மருத்துவ குழு அடிக்கடி சென்று சோதனை செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் எதிர்காலத்தில் நோய் தொற்று அதிகம் ஏற்பட்டால் இதே முறையை நாம் கடைபிடிக்க வேண்டி இருக்கும். மார்ச் 24 ஆம் தேதியிலிருந்து 54 நாட்கள் ஒற்றை இலக்கத்தில் இருந்த தொற்று, மத்திய, மாநில அரசுகளின் தளர்வு காரணமாக அதிகமாக உள்ளது. தற்போது வரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து சிலருக்கு பரவும் நிலை தான் புதுச்சேரியில் உள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சரியான தகவல்களை கொடுக்காததன் காரணமாகவும், ஆரோக்கிய சேது செலியை பதிவு செய்யாததாலும் அவர்கள் யாராருடன் தொடர்பில் இருந்தார்கள் என்பதை உடனடியாக கண்டுபிடிக்க முடியவில்லை. கண்டுபிடிக்க முடியாத இந்த 10 சதவீதம் பேரால் பிறருக்கும் தொற்று ஏற்படுகிறது. இதிலிருந்து நாம் தப்பித்துக் கொள்ள வேண்டும் என்றால், தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும், முகக்கவசம் அணிய வேண்டும், கைகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்'' என்றார்.