புதுவையில் கைதிக்கு கொரோனா.. கலக்கத்தில் போலீசார்
புதுச்சேரி: புதுச்சேரியில் கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், போலீசார் அச்சமடைந்துள்ளனர்.
புதுச்சேரி சுப்பையா நகர் பகுதியை சார்ந்த மூர்த்தி என்பவரை
கடந்த 7-ந் தேதி அதே பகுதியை சேர்ந்த முகமது கில்லால், சதீஷ் மற்றொரு சதீஷ் உள்பட 4 பேர் முன்விரோதம் காரணமாக வெட்டி உள்ளனர். இதில் பலத்த காயமடைந்த மூர்த்தி தற்போது ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்த புகாரின் பேரில் கோரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமது கில்லால், சதீஷ், மற்றொரு சதீஷ், விக்னேஷ் உள்பட 5 பேரை கைது செய்தனர். இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைப்பதற்கு முன்பு, கதிர்காமம் அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதில் 5 பேரில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து தொற்றால் பாதிக்கப்பட்ட கைதி மற்றும் அவருடன் இருந்த மற்ற 4 கைதிகளும் கதிர்காமம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனாவை கட்டுப்படுத்த.. 15 நாட்களுக்கு சென்னையில் முழு கடையடைப்பு செய்ய தயார்.. வணிகர் சங்கம்
இதனைத்தொடர்ந்து கோரிமேடு தன்வந்திரி காவல் நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது. மேலும் குற்றவாளிகளை கைது செய்த போலீசார் மற்றும் காவல் நிலையத்தில் இருந்த காவல் துறை அதிகாரிகள் அனைவரும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். கொரோனா குற்றவாளியை கைது செய்த போலீசார் தற்போது கலக்கத்தில் உள்ளனர்.