புதுச்சேரியில் இருந்து கேரளா சென்ற விமானநிலைய ஊழியருக்கு கொரோனா.. விபத்து மூலம் உறுதியானது
புதுச்சேரி: புதுச்சேரியில் இருந்து கேரளாவுக்கு சென்ற விமான நிலைய ஊழியருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் புதுச்சேரியில் அவர் வசித்து வந்த பகுதி முழுவதும் சீல் வைக்கப்பட்டு, அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
புதுவை சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மாநில சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார், காரைக்கால் மாவட்டம் சுரக்குடியை சேர்ந்த கொரோனா பாதிக்கப்பட்ட நபருக்கு 2 நாட்களுக்கு முன்பு பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என வந்துள்ளது. அவருக்கு மீண்டும் ஒருமுறை பரிசோதனை செய்யப்பட்டு, கொரோனா தொற்று இல்லை என வந்தால் அவர் வீட்டிற்கு அனுப்பப்படுவார்.
புதுச்சேரியில் இருந்து டெல்லி மாநாட்டிற்கு சென்றிருந்த 11 பேர் மற்றும் மாணவர்கள் 4 பேரும் இன்று புதுச்சேரிக்கு திரும்பி வருகின்றனர். அவர்கள் புதுச்சேரி இஎஸ்ஐ மருத்துவமனையில் உள்ள சிறப்பு பிரிவில் 14 நாட்கள் தனிமைபடுத்தப்படுவார்கள்.
மேலும் புதுச்சேரி கென்னடி நகரை சேர்ந்த 28 வயது நபர் கேரள மாநிலம் கண்ணூர் விமானநிலையத்தில் பணிபுரிந்து வரும் நிலையில், கடந்த14 ம் தேதி புதுச்சேரியில் இருந்து இருசக்கர வாகனத்தில் கண்ணூர் சென்றபோது அங்கு விபத்தில் சிக்கியுள்ளார். அவரை அங்குள்ள மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். அப்போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
லாக்டவுனால் சத்தீஸ்கர் திரும்பிய கர்ப்பிணி.. நடுவழியில் பிரசவம்- ஆண் சிசுவை சாலையில் கைவிட்ட துயரம்
இதனால் புதுச்சேரியில் அவர் வசித்த பகுதி முழுவதும் சீல் வைக்கப்பட்டு, அவருடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்தி கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.