ஜிப்மருக்குள்ளும் நுழைந்தது கொரோனா.. .3 பேருக்கு உறுதி.. கேன்சர் வார்டு மூடல்!
புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் முதல்முறையாக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மூதாட்டி ஒருவர் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்த அவருடைய உறவினர்கள் என மூன்று பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து ஜிப்மரில் உள்ள கேன்சர் வார்டு மூடப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் 8 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார். மேலும் 4 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிவிட்டனர். தற்போது 3 பேர் மட்டுமே இந்திராகாந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே ஜிப்மர் மருத்துவமனையில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த மூதாட்டி ஒருவருக்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தால் புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனை கோவிட்19 மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது. இங்கு புதுவை, தமிழகம் மற்றும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகம் உள்ள மாநிலங்களுக்கான கோவிட்19 சோதனை சேவைகள் வழங்கப்படுகிறது. இதுதவிர அனைத்து துறைகளிலும் அவசர சேவைகள் முழுமையாக இயங்கி வருகிறது.
நாள்தோறும் 100 க்கும் மேற்பட்டோருக்கு ஹீமோடையாலிசிஸ் சிகிச்சை, கதிர்வீச்சு, ஆன்காலஜி, மருத்துவ புற்றுநோய்க்கான சிகிச்சைகளும் வழங்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் சில துறைகளில் தொலை பேசி மூலம் ஆலோசனை வழங்கும் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்த 64 வயதுடைய மூதாட்டி ஒருவர் புற்றுநோய் சிகிச்சைக்காக, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு காய்ச்சல் உள்ளிட்ட கொரோனா அறிகுறிகள் இருந்ததையடுத்து, அவருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. சோதனை முடிவில் அந்த மூதாட்டிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து ஜிப்மரில் உள்ள கேன்சர் வார்டு மூடப்பட்டு, அந்த வார்டில் கடந்த நான்கு நாட்களாக பணியிலிருந்த மருத்துவர்கள் , செவிலியர்கள் மற்றும் வார்டுபாய் உள்ளிட்ட அனைவரையும் அடையாளம் கண்டு தனிமைப்டுத்தும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் அந்த மூதாட்டி வசித்த பகுதி சீல் வைக்கப்பட்டு, அவருடன் தொடர்பில் இருந்த உறவினர்களுக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், அந்த மூதாட்டியுடன் தொடர்பில் இருந்த உறவினர்கள் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதைனையடுத்து கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட மூன்று பேருக்கும் ஜிப்மர் மருத்துவமனையில் உள்ள தனி வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஜிப்மர் மருத்துவமனையில் முதல்முறையாக மூன்று பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர் சந்தித்த புதுச்சேரி மாநில சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார், புதுச்சேரி மாநிலத்தில் மே 3 ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கை நீட்டிக்க வேண்டுமென சுகாதாரத்துறை சார்பில் அரசிடம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும், ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் இறுதி முடிவு எடுப்பார்கள் என தெரிவித்தார்.