புதுச்சேரியில் மேலும் ஒருவருக்கு கொரோனா- பாதிப்பு எண்ணிக்கை 18 ஆக அதிகரிப்பு
புதுச்சேரி: புதுச்சேரியில் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் புதுச்சேரியில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் புதுச்சேரி மாநிலத்திலும் பரவியுள்ளது. புதுச்சேரியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மாநில எல்லைகள் மூடப்பட்டுள்ளன.
எல்லைகளில் 24 மணி நேரமும் போலீசார், மருத்துவக் குழுவினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அத்தியாவசிய பொருட்கள் ஏற்றிவரும் வாகனங்கள், மருத்துவ சிகிச்சைக்கு வரும் வாகனங்கள், அவசர தேவைக்காக வருபவர்களுக்கு மட்டும் அனுமதி அளித்து வருகிறார்கள்.
மருத்துவ பரிசோதனை மற்றும் கிருமி நாசினி தெளித்து சுகாதார பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே புதுச்சேரியில் 17 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இதில் 9 பேர் ஏற்கனவே சிகிச்சை முடிந்து வீடு திரும்பி விட்டனர்.
மேலும் புதுச்சேரியை சேர்ந்த 3 பேர் மற்றும் தமிழக பகுதியான விழுப்புரம், கடலூர் மாவட்டங்களை சேர்ந்த 5 பேர் என மொத்தம் 8 பேர் மட்டுமே ஜிப்மர் மற்றும் கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். தற்போது புதுச்சேரியில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி அருகே உள்ள அரும்பார்த்தபுரம் திருக்குறளார் நகரைச் சேர்ந்த 36 வயது தனியார் நிறுவன ஊழியருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அவருக்கு கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் அவர் வசிக்கும் பகுதி முழுவதும் சீல் வைக்கப்பட்டு, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதேபோல் கொரோனா பாதித்த நபருடன் தொடர்பில் இருந்தவர்கள், அவருடன் தொழிற்சாலையில் பணிபுரிந்த சக ஊழியர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட உள்ளது. புதுச்சேரியில் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.
உருமாற்றிக்கொள்ளும் கொரோனா வைரஸ்.. பயனற்றதாக மாறும் தடுப்பு மருந்துகள்.. விஞ்ஞானிகள் கவலை