வளைகாப்பால் வந்த விபரீதம்.. 4 பேருக்கு கொரோனா.. புதுவையில் வளைகாப்பு நடத்தியரை வளைத்த போலீஸ்!
புதுச்சேரி: சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு உரிய அனுமதியின்றி கொரோனா தொற்றுடன் பயணம் செய்த குடும்பத்தினர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் ஓட்டுநராக பணிபுரிபவர் தியாகராஜன். இவர் கடந்த 24 ஆம் தேதி கோரிமேடு ஜிப்மர் குடியிருப்பில் வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தியுள்ளார். இதற்காக சென்னையிலிருந்து உறவினர்களான கலியபெருமாள், சாந்தாதேவி, கணேஷ்குமார், சிவசங்கரி ஆகியோர் எந்த அனுமதியும் பெறாமல் புதுச்சேரி வந்துள்ளனர்.
வளைகாப்பு முடித்துவிட்டு சென்னைக்கு திரும்பியுள்ளனர். இந்நிலையில் சென்னையில் இருந்த கலியபெருமாளுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. கொரோனா பீதியால் சென்னைக்கு பதில் புதுச்சேரி ஜிப்மரில் சிகிச்சை பெறலாம் என அவர்கள் திட்டமிட்டு மறுநாள் சென்னையிலிருந்து 25 ஆம் தேதி காரில் கலியபெருமாள், சாந்தாதேவி, சிவசங்கரி, கணேஷ்குமார் ஆகியோர் புதுச்சேரிக்கு மீண்டும் எந்த அனுமதியும் பெறாமல் வந்துள்ளனர்.
கோரிமேடு எல்லைக்கு வந்தபோது அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த தட்டாஞ்சாவடி கிராம நிர்வாக அலுவலர் ஆறுமுகம் மற்றும் போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரித்தபோது கலியபெருமாளுக்கு சிகிச்சை அளிக்க வந்ததாக தெரிவித்துள்ளர். அவர்களிடம் முழுமையாக நடத்திய விசாரணையில் சென்னைக்கும், புதுச்சேரிக்கும் 2 நாட்களாக எந்தவித அனுமதியுமின்றி வந்து சென்றது தெரியவந்தது.
மேலும் ஒரு காரில் 2 பேருக்கு மேல் பயணம் செய்யக்கூடாது என்ற அரசு உத்தரவையும் மீறியிருந்ததையடுத்து 4 பேர் மற்றும் தடை உத்தரவை மீறி வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்திய தியாகராஜன் உள்ளிட்ட 5 பேர் மீதும் கிராம நிர்வாக அலுவலர் ஆறுமுகம் அளித்த புகாரின் பேரில் கோரிமேடு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பின்னர் அவர்கள் அனைவரும் ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களில் 4 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆகவே வளைகாப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கும் நோய் தொற்று பரவியிருக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் வளைகாப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் யார்? என்ற விபரங்களை சுகாதாரத்துறை, காவல்துறை சேகரித்து வருகின்றனர்.