புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு 8 ஆனது.. விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலைக்கு சீல் வைப்பு!
புதுச்சேரி: புதுச்சேரியில் மேலும் 2 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. மேலும் புதுச்சேரி - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையும் சீல் வைக்கப்பட்டுள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், இந்தியாவிலும் கடந்த சில நாட்களாக வேகமாக பரவி வருகிறது. கொரோனா தொற்று மேலும் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் வரும் 14 ஆம் தேதி வரை 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனிடையே டெல்லி மத மாநாட்டிற்கு சென்று வந்த பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.
அதன்படி, புதுச்சேரி மாநிலத்தில் டெல்லி மாநாட்டிற்கு சென்று திரும்பிய அரியாங்குப்பத்தைச் சேர்ந்த 2 பேர், இதில் ஒருவரின் மனைவி, திருவண்டார்கோவிலை சேர்ந்த ஒருவர் ஆகியோருக்கு கொரோனா தொற்று இருந்தது. இவர்கள் 4 பேரும் கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
டிரம்ப் செய்த தவறு.. சீனாவிலிருந்து அமெரிக்கா வந்த 4.3 லட்சம் பேர்.. கொரோனா இப்படித்தான் பரவியதா?
மூதாட்டி சீரடைந்தார்
இதேபோல் கேரள மாநிலம் அருகே உள்ள புதுச்சேரியின் மாஹே பிராந்தியத்தை சேர்ந்த 71 வயது முதியவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்ட மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். ஏற்கனவே மாஹே பிராந்தியத்தில் வெளிநாடு சென்று திரும்பிய மூதாட்டி சிகிச்சையில் உடல்நலன் சீராகி வீடு திரும்பினார்.
பலர் மீது சந்தேகம்
இந்நிலையில் புதுச்சேரியில் சந்தேகத்தின் அடிப்படையில் பலர் பரிசோதனை செய்யப்பட்டனர். அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லாவிட்டாலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதனிடையே பரிசோதனைக்கு அனுப்பியதில் மூலக்குளம் அன்னை தெரசா நகரை சேர்ந்த 48 வயதுடைய ஒருவருக்கும், திருவண்டார்கோவிலை சேர்ந்த 57 வயது எண்ணெய் வியாபாரி ஒருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது இன்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
8 ஆக உயர்வு
இவர்கள் இருவரும் டெல்லி மாநாட்டிற்கு சென்று திரும்பியவர்கள். இதனால் புதுச்சேரியில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. இதனைதொடர்ந்து கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட மூலகுளம் பகுதியில் முதலமைச்சர் நாராயணசாமி, மாவட்ட கலெக்டர் அருண், சீனியர் போலீஸ் சூப்பிரெண்டு ராகுல்அலுவால் ஆகியோர் சென்று ஆய்வு நடத்தினர்.
நெடுஞ்சாலைக்கு சீல் வைப்பு
இதனைதொடர்ந்து மூலகுளம் பகுதியில் உள்ள புதுச்சேரி - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலைக்கு சீல் வைக்கப்பட்டது. இந்த பகுதியில் வசிக்கும் சுமார் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளைவிட்டு வெளியே வருவதற்கு தடைவிதிக்கப்பட்டு, தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள இரண்டு நபர்களின் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் மற்றும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களும் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.