புதுச்சேரியில் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு.. அனைவரும் டெல்லி மத மாநாடு சென்று வந்தவர்கள்
புதுச்சேரி: டெல்லி இஸ்லாமிய மாநாட்டில் கலந்துகொண்ட புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த இரண்டு பேருக்கு இன்று காலை கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
டெல்லியில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற தப்லீக் ஜமாஅத் என்னும் இஸ்லாமிய மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் பெரும்பாலானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த மாநாட்டில் பங்கேற்ற புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த 6 பேர் அடையாளம் காணப்பட்டு, அவர்களை மருத்துவமனையில் அனுமதித்து ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டது. சோதனையில் புதுச்சேரி அரியாங்குப்பம் சொர்ணா நகரைச் சேர்ந்த இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
இந்நிலையில் டெல்லி மாநாட்டில் கலந்துகொண்ட திருபுவனை பகுதியைச் சேர்ந்த மற்றொருவருக்கும் கொரோனா தொற்று தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் புதுச்சேரியில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. இவர்கள் மூன்று பேருக்கும் கதிர்காமம் பகுதியில் உள்ள இந்திராகாந்தி அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள மூன்று நபர்களும் வசித்த வீடு சீல் வைக்கப்பட்டு, அவர்களுடைய உறவினர்கள் மற்றும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களை மருத்துவர்கள் பரிசோதித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல், அவர்கள் வசித்துவந்த பகுதி முழுவதும் சீல் வைக்கப்பட்டு, காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. அப்பகுதியில் வசிக்கும் மக்கள் யாரும் அத்தியாவசிய பொருட்கள் கூட வாங்க வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் புதுச்சேரியில் இருந்து மொத்தம் 21 பேர் கலந்துகொண்டனர். இதில் புதுச்சேரியை சேர்ந்த 6 பேரும், கரைக்காலை சேர்ந்த 3 பேரும் கடந்த 24 ஆம் தேதியன்று வீடு திரும்பிய நிலையில், மீதமுள்ளவர்கள் டெல்லியில் தங்கியுள்ளனர். மேலும் புதுச்சேரியை சேர்ந்த அந்ந 6 பேரும் கண்டறியப்பட்டு, பரிசோதனை செய்ததில் 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல் காரைக்காலை சேர்ந்த 3 பேர் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களது ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
ஏற்கனவே கேரள மாநிலம் அருகே உள்ள புதுச்சேரியின் மாஹே பிராந்தியத்தை சேர்ந்த மூதாட்டி ஒருவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு, மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த மூதாட்டி குணமடைந்து வீடு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.