4 வயது சிறுமிக்கு கொரோனா.. டெல்லி மாநாடு சென்று வந்த உறவினர் மூலம் பரவியது!
கடலூர்: கடலூா் மாவட்டத்தில் 4 வயது பெண் குழந்தைக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல் மருத்துவ மாணவி ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
டெல்லியில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற மத மாநாட்டில் பங்கேற்ற பலருக்கு தற்போது கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. கடலூர் மாவட்டத்தில் டெல்லி மத மாநாட்டில் பங்கேற்ற 41 பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இதனை தொடர்ந்து, அவா்களது குடும்ப உறுப்பினர்கள், அவர்களுடைய உறவினர்கள் மற்றும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களையும் சுகாதாரத் துறையினா் தனிமைப்படுத்தி, ரத்தம் மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி தற்போது 4 வயது சிறுமிக்கு கைரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த சிறுமி ஏற்கனவே கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நபரின் தங்கை மகள். இவர் விருத்தாசலம் பகுதியை சேர்ந்தவர். இதனால் கடலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 14 ஆக உயா்ந்துள்ளது.
இதேபோல் கடலூா் மாவட்டம் சிதம்பரத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் அங்குள்ள ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் முதுநிலை மருத்துவ படிப்பு பயின்று வருகிறாா். அண்மையில் கோவை சென்ற இவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது அங்குள்ள மருத்துவமனை மூலம் உறுதி செய்யப்பட்டது.
இதனால் சிதம்பரத்தில் அந்த மாணவி வசித்து வந்த சக்ரா அவென்யூ பகுதியில் முக்கிய வீதியை தடுப்புக் கட்டையால் மறைத்து போலீஸாா் கண்காணித்து வருகின்றனா். மேலும் அந்த மாணவியின் வீட்டில் பணிபுரிந்து வரும் பெண் சிதம்பரம் முத்தையா நகரில் வசித்து வருகிறாா். அவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால், கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை எனத் தெரியவந்தது. இருப்பினும் முத்தையா நகா் பகுதியும் தடுப்பு கட்டைகளால் அடைக்கப்பட்டது.