புதுவையில் செவ்வாய்க்கிழமை தோறும் தளர்வு இல்லாத முழு லாக்டவுன் அமல்!
புதுச்சேரி: புதுவையில் செவ்வாய்க்கிழமை தோறும் எந்த ஒரு தளர்வுமே இல்லாத முழு லாக்டவுன் அமல்படுத்தப்படும் என்று முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரியில் மொத்தம் 6381 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதுவரை 96 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதித்தோரில் 3,676 பேர் குணமடைந்துவிட்டனர்.
எஞ்சிய 2,609 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் புதுவையில் செவ்வாய்க்கிழமை தோறும் முழு லாக்டவுன் அமல்படுத்தப்படும் என முதல்வர் நாராயணசாமி அறிவித்திருக்கிறார்.
இலங்கை: ராஜபக்சே குடும்பத்தின் 5 பேர் அமைச்சர்கள்! டக்ளஸ் உள்ளிட்ட 4 தமிழர்களுக்கும் பதவி!!
இந்த நாட்களில் தளர்வுகள் எதுவும் இல்லாமல் கட்டுப்பாடுகள் முழுமையாக கடைபிடிக்கப்படும் என்றும் நாராயணசாமி அறிவித்திருக்கிறார். புதுவை மாநில பேரிடர் மேலாண்மை அமைப்பின் கூட்டத்துக்குப் பின்னர் இந்த அறிவிப்பை முதல்வர் நாராயணசாமி வெளியிட்டார்.
மேலும் இதர நாட்களில் புதுச்சேரியில் காலை 6 மணி முதல் இரவு 7மணி வரை கடைகள் திறந்திருக்க அனுமதிக்கப்படும் எனவும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
புதுவை முதல்வரின் அறிவிப்பு தொடர்பாக லோக்சபா எம்.பி. ரவிக்குமார் கூறியுள்ளதாவது:
புதுச்சேரியில் கொரோனா தொற்று அதிகரித்துக்கொண்டிருக்கும் நிலையில் இன்று முதல்வர் நாராயணசாமி தலைமையில் கூடிய கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் நிறைவளிக்கவில்லை.
வாரத்தில் செவ்வாய்க்கிழமை மட்டும் முழு அடைப்பு என்பது கொரோனாவைக் கட்டுப்படுத்த உதவுமா? விரைவில் Antibody test செய்யப்படும் என முதல்வர் அறிவித்திருந்தார். அதை துரிதப்படுத்தினால் நல்லது.
மத்திய அரசு தொடர்ந்து புதுச்சேரியை வஞ்சித்து வருவது சரியல்ல. தினசரி டெஸ்ட் எண்ணிக்கையை 5 ஆயிரமாக அதிகரிக்கவும் 20 ஆயிரம் புதிய படுக்கைகளை உருவாக்கவும் புதுச்சேரி அரசுக்கு மத்திய அரசு நிதி உதவி அளிக்கவேண்டும்.
கொரோனா தொற்று 'சமூகப் பரவல்' என்ற கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் பொதுமக்கள் மிகவும் விழிப்போடும் பொறுப்போடும் நடந்துகொள்வது அவசியம். இவ்வாறு ரவிக்குமார் கூறியுள்ளார்.