ம.பி டூ புதுச்சேரி.. கொரோனா சோதனை.. தனி விமானத்தில் வந்த 1,555 பேரின் உமிழ்நீர்!
புதுச்சேரி: மத்தியபிரதேச மாநிலத்தில் இருந்து கொரோனா பரிசோதனைக்காக 1,555 நபர்களின் உமிழ்நீர் மாதிரிகள் தனி விமானம் மூலம் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு, சோதனை நடைபெற்று வருகிறது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தால் புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனை கோவிட்19 மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது. இங்கு புதுச்சேரி, தமிழகத்திற்கான கோவிட்19 சோதனை சேவைகள் வழங்கப்படுகிறது. இதுதவிர அனைத்து துறைகளிலும் அவசர சேவைகள் முழுமையாக இயங்கி வருகிறது
நாள்தோறும் 100 க்கும் மேற்பட்டோருக்கு ஹீமோடையாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்படுகிறது. கதிர்வீச்சு, ஆன்காலஜி, மருத்துவ புற்றுநோய் துறைகள் தங்கள் சேவைகளை வழங்கி வருகிறது.
இந்நிலையில் மத்தியபிரதேசத்தில் இருந்து கொரோனா பரிசோதனைக்காக 1,555 நபர்களின் உமிழ்நீர் மாதிரிகள் தனி விமானம் மூலம் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மத்திய பிரதேசத்தில் இதுவரை 83 பேர் கொரோனா வைரஸ் தாக்கி பலியாகியுள்ளனர். மேலும் 1,699 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போதைய நிலவரப்படி மகாராஷ்டிரா, டெல்லி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் குஜராத்தில்தான் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகளவில் உள்ளது.
வடிவேலு பாணியில்.. அடுத்த "மண்டை" வரும் வரை.. இதைப் பிடி... புதுவையில் நூதன தண்டனை!
இதனிடையே மத்தியபிரதேசத்தில் இருந்து கொரோனா வைரஸ் தொற்று சோதனைக்காக 1,555 பேரின் உமிழ்நீர் மாதிரிகள் தனிவிமானம் மூலம் புதுச்சேரி விமான நிலையத்திற்கு மருத்துவக்குழுவுடன் கொண்டுவரப்பட்டது. பின்னர் விமானத்திலிருந்த உமிழ்நீர் மாதிரிகள், பலத்த பாதுகாப்புடன் ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றப்பட்டு, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகத்தால் கொரோனா மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ள ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
ஜிப்மர் மருத்துவமனையில் உமிழ்நீர் மாதிரிகள் உடனடியாக ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, முடிவுகள் அனைத்தும் மத்திய பிரதேசத்திற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.