லாக்டவுன்- மக்களுக்கு உதவி.. சிறுமியை தமது இருக்கையில் அமர வைத்து அழகு பார்த்த புதுவை கலெக்டர்
புதுச்சேரி: புதுவையில் கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு மடிக்கணினி வாங்க சேமித்த பணத்தில் 3 ம் வகுப்பு பயிலும் சிறுமி நிவாரண பொருட்கள் வாங்கி கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த மாணவியை தனது இருக்கையில் அமர வைத்து புதுச்சேரி கலெக்டர் அருண் பாராட்டினார்.
நாடு முழுவதும் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடுமுழுவதும் 3 ஆம் கட்டமாக நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கு வரும் 17 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. கொரோனாவின் தீவிரம் குறையாததால் 4 வது கட்டமாக ஊரடங்கை நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
ஊரடங்கால் நாட்டில் பெரும்பாலானோர் வேலைவாய்ப்பின்றி, கஷ்டப்பட்டு வருகின்றனர். இதனிடையே கொரோனா வைரஸ் தடுப்புக்குத் தேவையான மருத்துவ சிகிச்சை மற்றும் ஏழை மக்களுக்கு உதவி செய்ய புதுச்சேரி மாநில அரசு கோவிட்-19 நிவாரண நிதி புதுச்சேரி என்ற பெயரில் தனிக் கணக்கு தொடங்கி, மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள், பெரிய தனியார் நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து நிதி திரட்டி வருகிறது. இந்நிலையியில் புதுச்சேரியில் 3 ஆம் வகுப்பு பயிலும் சிறுமி ஒருவர் மடிக்கணினி வாங்க வைத்திருந்த பணத்தில், கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வாங்கி கொடுத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சபாஷ் போடுங்க பவானி போலீஸுக்கு.. குட்டீஸை எப்படி பாத்துக்கறாங்க பாருங்க!
3-ம் வகுப்பு மாணவி தியா
தேங்காய்த்திட்டு பகுதியை சேர்ந்தவர் வெள்ளையன், தனியார் நிறுவன ஊழியர். இவருடைய மனைவி வித்யா. இவர்களது மகள் தியா (9). தனியார் பள்ளியில் 3 ம் வகுப்பு படிக்கிறார். மடிக்கணினி வாங்குவதற்காக தியா தனக்கு பெற்றோர்கள் அவ்வப்போது தந்த பாக்கெட் மணியை உண்டியலில் சேகரித்து வந்தார்.
சேமிப்பில் உதவ முடிவு
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் எடுத்து வரும் நடவடிக்கைகளால் அன்றாடம் தொழில் செய்து பிழைப்பு நடத்திய தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பதை அறிந்து மாணவி தியா வேதனை அடைந்தார். இதையடுத்து தனது சேமிப்பு பணத்தில் இருந்து அவர்களுக்கு உதவ முடிவு செய்தார். இதுகுறித்து தனது தந்தை வெள்ளையனிடம் தியா தெரிவித்தார். அவரும் மகளின் விருப்பத்தை வரவேற்றார். இதையடுத்து தியா பணம் சேகரித்து வந்த உண்டியலை உடைத்து பார்த்ததில் 24,347 ரூபாய் இருந்தது.
57 பாதிக்கப்பட்டோருக்கு உதவி
அந்த பணத்தில் கைத்தறி நெசவாளர்கள், நாதஸ்வர கலைஞர் கள், பிறமாநில தொழிலாளர்கள், ஓட்டுனர்கள், திருமண மண்டபங்களில் வேலைபார்க்கும்ஆப்புரவு பணியாளர்கள் உள்பட நலிவுற்ற குடும்பத்தினர் 57 பேரை தேர்வு செய்து அவர்களது குடும்பங்களுக்கு தேவையான அரிசி, மளிகை பொருட்கள், காய்கறிகள், குழந்தைகளுக்கு பிஸ்கெட் ஆகியவை வாங்கி கொடுக்கப் பட்டது.
இருக்கையில் அமர வைத்த ஆட்சியர்
சிறுமியின் இந்த செயலை அறிந்த புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அருண், சிறுமி தியா மற்றும் அவரது பெற்றோரை தனது அலுவலகத்திற்கு அழைத்து பாராட்டினார். மேலும் கலெக்டராக வேண்டும் என்ற லட்சியம் கொண்ட சிறுமியை தனது இருக்கையில் அமர வைத்து, வாழ்த்து தெரிவித்தார். கொரோனாவால் வேலை இழந்து, வருமானமின்றி தவித்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தனது சேமிப்பு பணத்தில் சிறுமி தியா நிவாரண பொருட்கள் வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.