அப்பனே விநாயகா.. கொரோனா ஒழியனும்ப்பா.. மணக்குள விநாயகர் கோவிலில் மூலிகை சாம்பிராணி!
புதுச்சேரி: கோரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரியில் மிகவும் பிரசித்திபெற்ற மணக்குள விநாயகர் கோவிலிலில் கிருமிகளை அழிக்க காலை, மாலை இரு வேளைகளிலும் சிறப்பு மூலிகை சாம்பிராணி புகை போடப்படுகிறது.
Recommended Video
மேலும் பக்தர்களுக்கு அர்ச்சகர்கள் நெற்றியில் விபூதி மற்றும் குங்குமமிடுவதற்கு கோவில் நிர்வாகம் தடைவிதித்து உள்ளது.
சீன நாட்டில் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி கடும் பீதியை ஏற்படுத்தி வருகிறது.
இந்தியாவிலும் பாதிப்பு
கொரோனா வைரஸ் இந்தியாவையும் கடுமையாக பாதித்துள்ளது. இந்தியாவில் அனைத்து கல்வி நிறுவனங்களையும் வருகிற மார்ச் 31 ஆம் தேதி வரை மூட வேண்டும். கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு தடை, பொதுமக்கள் ஒன்று கூட அனுமதி மறுப்பு, வணிக வளாகங்களை மூட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
புதுச்சேரி மாநிலத்திலும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆன்மிக சுற்றுலா நகரான புதுச்சேரிக்கு நாள்தோறும் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். வெளியூர்களிலிருந்து வரும் பக்தர்களால் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
திருநள்ளாறு
உலக பிரசித்திபெற்ற திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில் நளதீர்த்த குளத்தில் குளிக்க பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலுக்கு வெளிநாட்டிலிருந்து வரும் பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டிலிருந்து வரும் பக்தர்கள் 28 நாட்களுக்கு பிறகு, உரிய பரிசோதனைக்கு பிறகே மணக்குள விநாயகர் கோவிலுக்கு வரவும் என கோவில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
பக்தர்களுக்கு விபூதி கூடாது
இதனிடையே மணக்குள விநாயகர் கோவிலில் கெட்ட கிருமிகளை அழிக்க காலை, மாலை என இரு வேளையிலும் சிறப்பு மூலிகை சாம்பிராணி புகை தற்போது போடப்பட்டு வருகிறது. மேலும் பக்தர்களுக்கு நெற்றியில் குங்குமம், விபூதியிடுவதற்கு கோவில் குருக்களுக்கு நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதனால் கொரோனா பரவலை ஓரளவு தடுக்க முடியும் என்று நம்பப்படுகிறது.