மோடி அழைப்பு ஆதரவு- புதுவையில் மஞ்சள் நீராட்டு விழா முதல் அத்தனையுமே ரத்து!
புதுச்சேரி: பிரதமர் நரேந்திரமோடியின் வேண்டுகோளுக்கிணங்க வருகின்ற 22 ஆம் தேதி புதுச்சேரியில் கடைகள், உணவகங்கள் உள்ளிட்ட அனைத்து வணிக நிறுவனங்களும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தனியார் மண்டபத்தில் நடைபெற இருந்த மஞ்சள் நீராட்டு விழாவும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரசுக்கு எதிரான சோதனை ஓட்டமாக வருகின்ற 22 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று, வருகின்ற 22 ஆம் தேதி புதுச்சேரியில் உணவகங்கள், கடைகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டிருக்கும் என அந்தந்த சங்கங்களை சார்ந்தவர்கள் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் புதுச்சேரி லெனின் வீதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வருகிற 22 ஆம் தேதி மாலை மஞ்சள் நீராட்டு விழா ஒன்று நடைபெறுவதாக இருந்தது. ஆனால் பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று விழா ஏற்பாட்டாளர்கள், மஞ்சள் நீராட்டு விழாவை ரத்து செய்துள்ளனர். இதற்கான அறிவிப்பு பலகையும் அந்த மண்டபத்தின் வாயிலில் தொங்கவிடப்பட்டுள்ளது.
இதேபோல் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில், புதுச்சேரியில் உள்ள 300 மண்டபங்களில் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்கான முன்பதிவை நிறுத்தி வைத்துள்ளனர். புதுச்சேரி திருமண மண்டப உரிமையாளா்கள் நலச் சங்கத்தினர். ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட திருமண நிகழ்ச்சிகள் மட்டுமே தற்போது நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் கொரோனா பாதிப்பு நீங்கிய பிறகுதான் திருமண நிகழ்வுகளுக்கான முன்பதிவு மீண்டும் தொடங்கும் என மண்டப உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே புதுச்சேரியில் உள்ள அனைத்து கோவில்களும் வருகின்ற 31 ந்தேதி வரை மூடப்பட்டு இருக்கும் என இந்துசமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது.