புதுச்சேரியில் கொரோனா தடுப்பூசி வழங்கும் பணிகள் தொடக்கம்.... முதல்வர் நாராயணசாமி தொடங்கி வைத்தார்
புதுச்சேரி: புதுச்சேரியில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை ராஜீவ்காந்தி குழந்தைகள் மற்றும் மகளிர் மருத்துவமனையில் அம்மாநில முதல்வர் நாராயணசாமி தொடங்கி வைத்தார்.
கொரோனாவுக்கு எதிரான போரில் வரலாற்று முக்கிய நிகழ்வாக இன்று இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்பட்டன. இதற்காக சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு மற்றும் பாரத் பயோடெக்கின் கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் தடுப்பூசி செலுத்தும் பணிகளைத் தொடங்கி வைத்தார். முதல் நாளான இன்று நாடு முழுவதும் உள்ள சுமார் மூவாயிரம் தடுப்பூசி மையங்களில், தலா நூறு பேர் வீதம் சுமார் மூன்று லட்சம் பேர் தடுப்பூசி போடத் திட்டமிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாநிலத்திலும் அம்மாநில முதலமைச்சர்கள் தடுப்பூசி வழங்கும் பணிகளைத் தொடங்கி வைத்தனர். அதன்படி புதுச்சேரி மாநிலத்தில் தடுப்பூசி வழங்கும் பணிகளை அம்மாநில முதல்வர் நாராயணசாமி தொடங்கி வைத்தார்.
தடுப்பூசி பாதுகாப்பானது.. நானும் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்வேன்.. முதல்வர்
புதுச்சேரியில் ராஜீவ்காந்தி குழந்தைகள் மற்றும் மகளிர் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. அம்மாநிலத்தில் மருத்துவப் பணியாளர் முனுசாமி என்பவருக்கு முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
இந்தியாவில் நாடு முழுவதும் கோ-வின் செயலியைப் பயன்படுத்தி கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த செயலியில் பதிவு செய்து கொண்டவர்களுக்கே தடுப்பூசிகள் செலுத்தப்படும். இந்த கோ-வின் செயலி விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.