தலைமறைவான வட மாநில கொரோனா வாலிபர் நிதின் சர்மா.. தேடப்படும் நபராக அறிவித்தது விழுப்புரம் நிர்வாகம்
விழுப்புரம்: விழுப்புரத்தில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு, தலைமறைவாக உள்ள வடமாநில வாலிபர் நிதின் சர்மாவை, தேடப்படும் நபராக அறிவித்தது விழுப்புரம் மாவட்ட நிர்வாகம். மேலும் 3 தனிப்படைகள் அமைத்து அந்த வாலிபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
Recommended Video
விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று வரை 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 51 வயதுடைய தலைமை ஆசிரியர் ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு உயிரிழந்தார்.
இந்நிலையில் கொரோனா தொற்று அறிகுறியுடன் அரசு மருத்துவமனையில் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த 26 பேர் கடந்த 7 ஆம் தேதி விடுவிக்கப்பட்டனர். இவர்கள் விடுவிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே அவர்களில் 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இந்த சம்பவம் விழுப்புரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனிடையே அந்த 4 பேரில் 3 நபர்கள் விழுப்புரத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களை போலீசார் உதவியுடன், சுகாதாரதுறையினர் கண்டுபிடித்து, மீண்டும் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் ஒரு நபர் மட்டும் டெல்லியை சேர்ந்த 30 வயதுடைய வாலிபர். இவர் விடுவிக்கப்பட்டதிலிருந்தே தலைமறைவாக உள்ளார். அவரை விழுப்புரம் மற்றும் அண்டை மாநிலமான புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதனிடையே அவரை தேடப்படும் நபராக அறிவித்துள்ளது விழுப்புரம் மாவட்ட நிர்வாகம். மேலும் அந்த நபரின் புகைப்படத்தை வெளியிட்டு, அந்த நபர் குறித்து தகவல் தெரிந்தால் பொதுமக்கள் உடனடியாக 04146 223265 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவிக்க வேண்டுமென கேட்டுகொள்ளப்பட்டுள்ளது. மேலும் 3 தனிப்படைகள் அமைத்து அந்த நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மேலும் டெல்லி வாலிபர் மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்டதற்கு முழுக்க முழுக்க சுகாதாரத்துறையின் அலட்சியமே காரணமாக கூறப்படுகிறது. அதேபோல் தனக்கு கொரோனா தொற்று இருக்கும் என்ற தகவலை அந்த வாலிபர் அறிந்துள்ளரா என்பதும் தெரியவில்லை. அவர் விழுப்புரத்தில் தங்கியுள்ளாரா? அல்லது சரக்கு வாகனங்கள் மூலம் தனது சொந்த ஊரான டெல்லிக்கு சென்றுகொண்டிருக்கிறாரா என்ற விவரமும் தெரியவில்லை.