15 நிமிடத்தில் க்ளோஸ்.. ரங்கசாமிக்கு மெசேஜ் அனுப்பிய திமுக.. ப்பா செம டிவிஸ்ட்.. ஸ்டாலின் கேம்பிளான்
புதுச்சேரி: தமிழக அரசியல்தான் ஒரு பக்கம் திருப்பங்களுடன் சென்று கொண்டு இருக்கிறது என்று பார்த்தால்.. பக்கத்தில் புதுச்சேரி அரசியல் யோசித்து பார்க்க முடியாத பல திருப்பங்களை சந்தித்து வருகிறது. அதுவும் புதுச்சேரியில் திமுக காய் நகர்த்தும் விதம் காங்கிரஸ், என். ஆர் காங்கிரஸ், பாஜக, அதிமுக என்று எல்லோரையும் குழப்பி உள்ளது.
அரசியலில் நீண்ட கால நண்பன் என்று யாரும் இல்லை.. நீண்ட கால எதிரி என்றும் யாரும் இல்லை. எப்போது யார், யாருடன் சேர்வார் என்பதை எல்லாம் கணிக்கவே முடியாது. அப்படி ஒரு விஷயம்தான் தற்போது புதுச்சேரி அரசியலில் நடந்து கொண்டு இருக்கிறது.
புதுச்சேரி அரசியலில் நேற்று நடந்த இரண்டு சம்பவங்கள் பெரிய திருப்பம் ஒன்றுக்கான தொடக்க புள்ளியாக பார்க்கப்படுகிறது. நேற்று அப்படி என்ன நடந்தது என்று பார்க்கும் முன் இதுவரை புதுச்சேரியில் நடந்த சம்பவங்கள் குறித்து சின்ன டிரெய்லரை பார்த்துவிடலாம்!
என்ன நடந்தது
2016 சட்டமன்ற தேர்தலில் புதுச்சேரியில் தி.மு.க, காங்கிரஸ் கூட்டணிதான் வெற்றிபெற்றது. இங்கு காங்கிரஸ் சார்பாக நாராயணசாமி முதல்வராக இருந்தார். துணை நிலை ஆளுநர் கிரண் பேடியுடன் நிறைய மோதல்களும் இருந்தாலும் ஆட்சி நிலையாகவே இருந்தது. ஆனால் தேர்தல் நெருங்குவதற்கு சில நாட்களுக்கு முன் புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது.
ஆளும்கட்சி
காங்கிரஸ் உறுப்பினர்கள் சிலர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜக, என். ஆர் காங்கிரசில் சேர்ந்ததால் மொத்தமாக திமுக - காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழ்ந்தது. இதையடுத்து என். ஆர் காங்கிரஸ் - பாஜக - அதிமுக சேர்ந்து கூட்டணி அமைக்கும். என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி முதல்வராக ஆவார் என்றெல்லாம் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதுதான் நடக்கவில்லை.
டிவிஸ்ட்
திடீரென பாஜக என்ன நினைத்ததோ என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமிக்கு எதிராக காய் நகர்த்தியது. பாஜகவின் நமச்சிவாயத்தை முதல்வர் வேட்பாளராக அறிவித்து தேர்தலை சந்திக்க பாஜக திட்டமிட்டது. இதை ரங்கசாமி விரும்பவில்லை. தன்னை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ளும் கட்சியுடன் கூட்டணி வைக்கும் யோசனையில் அவர் இருக்கிறார். இதுதான் தற்போது அங்கு நடக்கும் அரசியல் குழப்பங்களுக்கு காரணம்.
சம்பவம் 1
இந்த நிலையில் நேற்று நடந்த இரண்டு சம்பவங்கள் இந்த குழப்பம் மேலும் அதிகரித்துள்ளது. தேர்தல் கூட்டணி தொடர்பாகவும், கூட்டணி குறித்தும் நேற்று என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியை பாஜகவின் மாநிலத் தலைவர் சாமிநாதன், மேலிட பொறுப்பாளர்கள் சுதாகர் ரெட்டி உள்ளிட்ட மூத்த உறுப்பினர்கள் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பில் தான்தான் முதல்வர் வேட்பாளர் என்று உறுதியாக ரங்கசாமி அறிவித்துவிட்டார்.
ரங்கசாமி என்ன சொன்னார்
முதல்வர் பதவியை கொடுக்கவே முடியாது என்று ரங்கசாமி பிடிவாதமாக இருந்துள்ளார். ரொம்ப ஸ்டிரிக்ட்டாக சொன்ன சொல்லில் ரங்கசாமி உறுதியாக இருந்துள்ளார். இதனால் போன வேகத்தில் 15 நிமிடத்தில் மீட்டிங்கை முடித்துவிட்டு பாஜக தலைவர்கள் திரும்பி உள்ளனர். பாஜக - ரங்கசாமி இடையே இருக்கும் இந்த கருத்து வேறுபாட்டை பயன்படுத்திக்கொள்ள திமுக திட்டமிட்டு தற்போது ரங்கசாமிக்கு மெசேஜ் அனுப்ப தொடங்கி உள்ளது.
சம்பவம் 2
ரங்கசாமியை எப்படியாவது மதசார்பற்ற கூட்டணி பக்கம் கொண்டு வர திமுக முடிவு செய்துள்ளது.இதை நேற்று வெளிப்படையாகவே திமுக அறிவித்துவிட்டது. மதசார்பற்ற கூட்டணிக்கு தலைமை ஏற்க வாருங்கள் என்று ரங்கசாமிக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது. காரைக்கால் திமுக அமைப்புச் செயலாளர் நாஜிம் போன்ற மூத்த தலைவர்கள் மூலம் ரங்கசாமிக்கு இந்த அழைப்பு சென்றுள்ளது.
சிக்னல்
ரங்கசாமி தலைமையை ஏற்க தயார் என்பது போல திமுக சிக்னல் கொடுத்துள்ளது. ஸ்டாலின் இதைத்தான் விரும்புகிறார் என்றும் ரங்கசாமியிடம் நேற்று திமுக தரப்பு தெரிவித்துள்ளது. காங்கிரஸ் உடன் தமிழகத்தில் திமுக கூட்டணி பேச்சுவார்த்தை இழுபறியில் சென்று கொண்டு இருக்கிறது. இப்படிப்பட்ட நேரத்தில் புதுச்சேரியிலும் காங்கிரசுக்கு திமுக ஷாக் கொடுக்க திட்டமிட்டுள்ளது.
எப்படி
ரங்கசாமியுடன் திமுக கூட்டணிக்கு சென்றால் அதில் காங்கிரஸ் இருக்குமா என்பது சந்தேகம்தான். திமுக, பாஜக இரண்டில் ரங்கசாமி யாருக்கு டிக் அடிக்கிறார் என்பதை பொறுத்தே கூட்டணி மாற்றங்கள் நடக்கும் என்கிறார்கள். ரங்கசாமி எப்போது என்ன முடிவு எடுப்பார் என்று கணிக்க முடியாத நபர் என்பதால்.. புதுச்சேரி அரசியலில் எப்போது வேண்டுமானாலும் திருப்பங்கள் நடக்கலாம்.